வாழ்க வளமுடன்

பிரபஞ்சத்தைப் பற்றிய அறிவு என்று சொன்னால், அது பஞ்சபூதங்களின் தன்மையை உணர்ந்து கொள்வது தான். ஏனென்றால், எப்படிப் போனாலும், பஞ்ச பூதங்களையும் அதிலிருந்து வரக்கூடிய விளைவுகளையும் தவிர வேறொன்றையும் மனிதன் அறிவது இல்லை. ஆகையினாலே, இவைகளையெல்லாம் அறிந்து கொள்வதற்கு வேண்டிய சங்கற்பத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். காப்பு எடுத்துக் கொள்ள வேண்டும். எப்பொழுதுமே நமது மனத்தை ஏற்புச் சக்தி வாய்ந்ததாக ஆக்கிக் கொள்ள வேண்டும். ஐந்து பெளதீகப் பிரிவுகளிடையேயும் நமது அறிவையும், மனத்தையும், ஜீவகாந்த சக்தியையும் செலுத்தி நமக்கு வலுவைத் தேடிக் கொள்கின்ற தவமே பஞ்சபூத தவம்.

               எனவே, நமது மனத்தை ஒழுங்குபடுத்தி, அதற்கான ஒரு பயிற்சி மூலம் ஒவ்வொரு பூதத்தோடும் ஒன்றி, நின்று உயிர்காப்பைச் சரியான முறையிலும், அளவிலும் பெற்றுப் பழகி கொண்டால் வாழ்க்கையில், பஞ்ச பூதங்களான பொருட்களோடும், உயிர்களோடும், தொடர்பு கொள்ளும்போது, உயிர்க்கலப்பு பெறும்போது அந்த உயிர்க்கலப்பு முழுமையாகவும், சரியானதாகவும் வெற்றியும், இனிமையும் தரத்தக்கதாகவும் அமையும். இந்தப் பயிற்சியால் பஞ்ச பஞ்சபூதங்கள் ஒவ்வொன்றோடும் முறையாக, முழு அளவில், ஏற்ற சங்கற்பக் கருத்துக்களோடு உயிர்க்கலப்புப் பெற்றுப் பெற்றுப் பக்குவம் அடைந்த மனமானது, எந்த அனுபோகத்திலும், சலிப்போ, வெறுப்போ, தோல்வியோ ஏற்காத பக்குவத்தைப் பெறுகிறது; இனிமையைக் காத்துக் கொள்ளும் திறமை பெறுகிறது. அத்தகு மனத்தினால் எந்தப் பொருளோடும் இணைய முடிகிறது. எந்தச் சக்தியோடும் இணைந்து பயன்கொள்ள முடிகிறது. அந்தப் பொருளால் அல்லது சக்தியால் விளையக்கூடிய பாதகங்களில் இருந்தும் காப்புப் பெற முடிகிறது. அந்தப் பொருள் மற்றும் சக்தி பற்றிய முழு விளக்கத்தையும், தெளிவையும் பெறவும் பயன் கொள்ளவும் முடிகிறது.

--  யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

No Responses to "பஞ்சபூத அறிவு"