வாழ்க வளமுடன்

Showing posts with label மகரிஷியின் தத்துவங்கள். Show all posts

கேள்வி: இன்றைய கால மாணவர்கள் பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் போராட்டமான நிலையில் இருந்து வருகிறார்கள். அவர்கள் இதிலிருந்து தெளிவு பெறுவது அதாவது மனக் குழப்பத்திலிருந்து விடுபடுவது எவ்வாறு என்று கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மகரிஷி: மனதுக்குப் பயிற்சியளிக்க வேண்டும். உடலுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். அதாவது இரண்டு விதத்தில் உடலுக்குப் பயிற்சி வேண்டும். இது வரையில் செய்த செயல்களினால், இந்த அணு அடுக்குகள் எல்லாம் சீர் குலைந்துபோய் நோய் பதிவாகியிருக்கும். அவையெல்லாம் போக்குவதற்கும், இனி நோய் வராமல் இருப்பதற்கும் தக்க பயிற்சி உடற்பயிற்சி அவசியம்.அதற்கும் மேலாக எல்லோருக்கும் கருமையம் களங்கப்பட்டு இருக்கிறது. அதைத் தூய்மை செய்வதற்கு காயகல்பப் பயிற்சி என்று இதிலேயே ஒரு பயிற்சி இருக்கிறது. வித்து சுத்தம் செய்யும், உயிர்ச்சக்தியை அதிகரிக்கும். அதே நேரத்தில் சீவ காந்த சக்தியையும் அதிரிக்கும். இந்த மூன்றையும் திருத்தி கருமையத்தையே தூய்மை செய்யக்கூடியது வளப்படுத்தக் கூடியது காயகல்பப் பயிற்சி. அதுவும் மனவளக்கலையில் சேர்ந்துதான். அதைச் செய்தால்தான் மாணவர்களினுடைய மனநிலை சரியாக, தெளிவாக இருக்கும். மேலும் மேலும், முயற்சி விடா முயற்சி நன்மை தரும்.

கேள்வி : ஐயா.ஞானியர்கள் என்பவர்கள் யார்?

மகரிஷி : நான் போய்க் கொண்டிருக்கும்பொழுது ஒருவர் வந்து இது நன்றாக இருக்கிறது. எனக்கு வேண்டும் என்று என் மேல் துண்டை இழுக்கிறார். நான் சரி என்று விட்டு விடலாம். எனக்கு அதன் மீது கடும்பற்று என்றால் நான் அதை விட மாட்டேன். அவர் என் கைகளைப் பிடித்துக் கொள்கிறார். நான் பார்ப்பேன். வேறு வழியில்லை. உடனே என் வாயால் அவர் கையை கடித்து விடுவேன். இது சந்தர்ப்பத்தால் வெளிப்படும் செயல். ஆனாலும் கருத்தொடர் மூலம் விலங்கினத்தில் இருந்து வந்ததுதான். அவ்வளவும் உள்ளே அடக்கமாக இருக்கிறது. மனிதர்கள் நல்லவர்களாக இருக்கின்றார்கள் என்று சொன்னால் அவர்களிடம் அடங்கியுள்ள பதிவுகள் செயலாக மாற அவர்களுக்குச் சந்தர்ப்பம் இல்லை. அதனால் அப்பதிவுகள் அடங்கி இருக்கிறது என்று அர்த்தம். ஆக எல்லோரிடமும் இருக்கும் பிறர் வளம் பறித்துண்ணும் செயலும், பிறர் உயிரை வருத்தி வாழ்தலும் அடங்கியுள்ளன. இதிலிருந்து மீண்டு வந்தால்தான் மனிதனாக வர முடியும். அத்தகையவர்கள் தான் மெய்ப்பொருள் உணர்ந்த ஞானியர்கள்.

1. அணுக்களின் கொத்து இயக்க நிகழ்ச்சியே தூல உடல்.அதனூடே பரமாணு நிலையில் ஊடுருவிச் ஓடிச் சுழன்று கொண்டேயிருப்பது உயிர்ச்சக்தி. உயிர்ச்சக்தியின் ஓட்டத்தில் தடையுண்டானால் அதுவே உணர்ச்சியாகின்றது. அந்த உணர்ச்சி ஒரு ஜீவன் தாங்கும் அளவிற்கும் தாங்கிப்பழகிய அளவிற்கும் மேலாக ஓங்கும்போது அது வல்லுணர்ச்சியாகி துன்பமாக, நோயாக உணரப்பெறுகின்றது. அந்த தடை நீடித்து, அதன் விளைவாக உடலில் மின் சாரம், காற்று, இரத்தம், ஆகிய மூன்று சுழல்களும் தடைப்படுமானால் உடலுக்கு மூலமான வித்து, தாங்கும் அளவுக்கு மேல் கனல் கொண்டு, அதன் நாளங்களைத் தகர்த்து வெளியேறிவிடும். உணர்ச்சி என்ற அறிவோடு கூடிய உயிச்சக்தி தொடர்ந்து அந்த உடலில் சுழன்று இயங்க முடியாமல் உடலை விட்டு வெளியேறி விடும். இந்த நிகழ்ச்சியே மரணம் எனப்படுகிறது.


2. உயிர்ச்சக்தி உடலில் ஒழுங்காக ஓடிக்கொண்டிருப்பதே இன்ப உணர்வாகும்; உடல் நலமாகும். அதைப் பாதுகாக்க (1) உணவு, (2) உழைப்பு, (3) உறக்கம், (4) ஆண்-பெண் உடலுறவு, (5) எண்ணம் இந்த ஐந்து அம்சங்களில் தொடர்ந்த கவனம் தேவை. இவை அளவுக்கு அதிகமானாலும் குறைந்தாலும் முறை தவறிக் கொள்ளப் பெற்றாலும் உயிர்ச்சக்தி ஓட்டம் பாதிக்கப்படும். நோய்கள் உண்டாகும்.

3. வாரத்திற்கு ஒரு முறை இரவில் உணவு கொள்ளாமல், இலேசாகப் பழ வகை உண்டோ, அல்லது சிறிது பால் அருந்தியோ உறங்குவது நோய்களை ஒரு அளவில் தடுக்க உதவும்.உடல் ஜீரணிக்கத்தக்க அளவு உணவு உண்டால் அது நன்மை பயக்கும். அளவுக்கு மீறினால், அந்த உணவு உடலை ஜீரணிக்கும்.

4. கருவமைப்பு, எண்ணம், செய்கை, கோள்களின் சஞ்சாரத்தில் அமையும் நிலை, சந்தர்ப்ப மோதல் ஆகிய காரணங்களால் உடலில் இரசாயன வேறுபாடுகள் உண்டாகின்றன. இத்தகைய வேறுபாடுகளால் உடலிலுள்ள அணு மூலகங்கள் அதற்கு ஏற்ப விரைவில் வேறுபடும். அதன் பயனாக உடலில் சுழன்றோடிக்கொண்டிருக்கும் காந்தம், மின்சாரம், இரத்தம், காற்று ஆகிய நால்வகையும் அவற்றின் விரைவில் ஏற்றத்தாழ்வுகளைப் பெறும். விளைவாக ஒவ்வொரு அவயங்களூடேயும் ஊடுருவிச் செல்லும் அவற்றின் ஓட்டத்தில் தடையும் உண்டாகும். இந்தத் தடை நோயாக உணரப்படுகிறது. எந்த அவயத்தில் எந்த அளவு எந்தச் சக்தியின் ஓட்டத்தில் தடைப்படுகிறதோ அதற்கு ஏற்ப நோயின் வலுவும், பெயரும், அதற்குக் காலமும் நிர்ணயிக்கப்பெறுகின்றன.

5. நோய்களை நீக்கிக் கொள்ளும் சக்தி இயற்கையாக உடலில் அமைந்துள்ளது.ஒத்த முறையில் பத்தியம் காத்து ஓய்வும் எடுத்துக்கொண்டால் நோய்கள் மிகவும் விரைவாகத் தீர்ந்துவிடும். நோய் கடினமாக இருந்தால் தக்க மருந்து வகைகளை உபயோகிக்கலாம்.

6. நோயற்ற உடலில்தான் அறிவும் திறன்பட இயங்கும். இயற்கை இன்பங்களைத் துய்க்க இயலும். எனவே ஒவ்வொருவரும் நோயுற்று வாழ வழிகண்டு நின்று ஒழுகி வாழவேண்டும்.

7. மனத்தூய்மை, ஒழுங்கான உணவு, அளவான உழைப்பு இவற்றுடன் கூடிய வாழ்க்கை, நோய்கள் இல்லா உடல் நலத்தோடு இருக்க உதவும். பொறாமை, சினம், வஞ்சம், கவலை, காம எண்ணங்கள் இவை உடல் காந்த சக்தியினை அளவுக்கு மீறி அழித்து விடும். தவத்தாலும் ஆராய்ச்சியாலும் இந்த உணர்ச்சி நிலைகளை மாற்றி விடலாம். உணர்ந்தோரை அண்டி முயலுங்கள். வெற்றி நிச்சயம்.

8. உணவு உண்ட உடனே ஓட்டம், சைக்கிள் சவாரி, கடினமான வேலை, ஆண் பெண் உடலினைப்பு இவை கூடாது. அடுத்தடுத்து இச்செயல்களில் ஈடுபடுவோருக்கு வயிற்றுப்புண் உண்டாகிவிடும். அது குன்மம் (Peptic Ulser) நோயாக வழங்கப் பெறுகின்றது.

9. உடலிலிருந்து கழிவாகி வெளியேறும் எந்தப் பொருளும் உடலின் மீது தங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.அவை உடனே கிருமிகளாக மாறும் வாய்ப்பு இருக்கின்றது. ஒரு நாளைக்கு ஒரு முறையாகிலும் வெந்த் நீரிலே தண்ணீரிலோ குளிக்க வேண்டியது அவசியம். மலபந்தம் (Constipation) அஜீரணம் இவை ஏற்படாமல் பாதுகாப்பது உடல் நலத்தைப் பேணும் வழிகளில் மிக முக்கியமானது.


10. எந்தக் காரணத்தைக் கொண்டும் பிறர் அணியும் செருப்பு, உடுத்தும் துணி, படுக்கும் பாய் இவற்றை மற்றவர் உபயோகிக்கக் கூடாது. தவிர்க்க முடியாத சமயத்தில் பிறர் பாயின் மீது துணி விரித்துப் படுப்பது நல்லது. மக்கள் கூட்டமாக கூடும் இடங்களில் மூன்று அடிக்கு ஒருவர் மேல் நெருங்கி இருக்கக் கூடாது. மூச்சு விடும்போது அவற்றில் வெளிவரும் சத்துக்கள் மிகவும் வேகமானவை. இருவர் மூச்சும் ஒன்று சேரும்போது உடனே கிருமிகளாக மாறும் தன்மையுடையன. அத்தகைய காலங்களில் கிருமி நாசினிப் புகையோ அல்லது சாம்பிராணிப் புகையோ இடைவிடாமல் பரப்பிக் கொண்டே இருக்கவேண்டும்.

- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

உடல்மன ஆற்றல்களை, இயற்கையாற்றல்களுக்கு உட்படுத்தியும் ஒத்தும் செயல்படுத்தினால் - பேரறிவையும், பேராற்றலையும் இயல்பாகக் கொண்ட இயற்கையானது உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும், வழிநடத்தியாகவும், வெற்றி மற்றும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் அமையும் என்பதே வாழ்வின் பயன்களை ஆழ்ந்து சிந்தித்துக் கண்ட தெளிவு ஆகும்.


இதுவே தன்முனைப்பின் அடக்கம், தன்முனைப்பு அடங்கப் பெற்ற மனிதனுக்கு, இறைநிலையின் பேராற்றலும், பேரறிவும் சொந்தமாகி விடுகின்றன. இந்த உண்மையினைப் பேரறிஞர் வள்ளுவப் பெருந்தகை எவ்வாறு உணர்த்தியிருக்கிறார் என்று அவர் அருளியுள்ள ஒரு குறளின் மூலம் உணரலாம்.

"அடக்கம் அமர்அருள் உய்க்கும் அடங்காமை

ஆர் இருள் உய்த்து விடும்"


தனிமனிதன், மனித சமுதாயம், மனித குலம் எவரெனினும், 'அடக்கம்' என்ற உயர் நெறியை உணராமலும், அதன் வழியே வாழாமலும் 'அடங்காமை' என்ற குழியில் விழுந்து அதனால் விளையும், பெருகும் துன்பங்களே மனித குல வாழ்க்கைத் துன்பங்கள் ஆகும். இயற்கை நியதியை அறியாமலோ, அலட்சியம் செய்தோ, உணர்ச்சி வயப்பட்டோ மனிதன் செயலாற்றும் போது ஏற்படும் விளைவுகள் தான் துன்பங்கள், பொருளிழப்பு, ஏழ்மை, நோய்கள், உறுப்பிழப்பு, அகால மரணம் ஆகிய அனைத்துக் கேடுகளுமாகும். செயல்-விளைவுத் தத்துவத்தில் முதல்பாடம் இதுவே.



-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

நான் - என்ற தத்துவமே நாம்

தண்ணீரே சமுத்திரம், ஆறு, ஏரி, குளம், குட்டை, மழை, மேகம் என்ற பல பெயர்களால் அழைக்கப்படுவது போல,

'நான் என்று சொல்லும் அறிவின் தத்துவமே - காந்த சக்தி அலை இயக்கமே - பல்வேறு உருவில், அதனதன் தன்மைக்கேற்ப இயக்கும், இயங்கும் சக்தியாகவும், உணரும் ஆற்றல் நிலையாகவும் இருக்கிறது.

ஆகையால், இந்த "நான்" என்ற தத்துவம் தான் - சக்திதான் - நாம் என்ற பலராக, அனேக கோடி சீவன்களாக, மனிதர்களாக, அறிவியக்கங்களாக இருக்கிறது.

உருவ அளவில் மனதுக்கு எல்லைகட்டிக் கொண்டு பல நாடுகளிலும் சிதறி வாழ்ந்து, தேசம், இனம், ஜாதி, மதம் என்னும் வேறுபாடுகளைக் கற்பித்துக் கொண்டு, அதனால் வாழ்க்கையில் பலவிதமான துன்பங்களையும் அனுபவித்துவிட்டோம். ஆழ்ந்து ஆராய்ந்த போது, அறிவின் தத்துவமாகிய ஆன்ம நிலையை அறிந்து விட்டோம். அந்நிலையில் அனைத்துயிரும் ஒன்றென்று அறிந்தோம். இந்த விரிந்த மனநிலையில் அனைவரும் வாழ வேண்டும்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

                 இன்றுமக்களிடை “இவரைக் கெடுத்துவிட வேண்டும்” என்று அவரும் “அவரைக் கெடுத்துவிட வேண்டும்” என்று இவரும் இன்னும் பலப்பல விதத்திலும் தீய எண்ணம் மலிவாகக் காணப்படுகிறது. ஆனால், அந்த எண்ணங்கள் செயல்பட விடாமல் அவரவர்களும் எதிர் நடவடிக்கை மூலம் தடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். செயலுக்கு வர முடியாத இந்தத் தீய எண்ணங்களின் தொகுதி என்ன ஆகும்? செயலாகாத வரை அவற்றுக்கு நிறைவும் வராதே! அதுதான் இன்றெல்லாம் நாம் காணும் இயற்கை உற்பாதங்களாக - அதாவது புயல், வெள்ளம் என உருவெடுத்து எல்லோருக்கும் துன்பமாக மலர்ந்து கொண்டிருக்கிறது. ஏனெனில், இயற்கையே தான் எண்ணமாக வந்திருக்கிறது. எண்ணமும் இயற்கையின் ஒரு கூறுதான்.

ஒளி ஒன்றுதான். அது ஆற்றிய செயல்களும், விளைவுகளும் பலப்பல. அதுபோல் எண்ணமும் ஒன்றுதான். என்றாலும் அது ஆற்றும் செயலும் விளைவுகளும் கணக்கிட முடியாதன. எண்ணத்தின் விளைவறியாது எண்ணி எண்ணி அது விளைவாகிச் செயலாக மலரும்போது அவற்றைத் தாங்க முடியாமல் மனிதன் திணறுகிறான். அவனே வலையும் விரித்து, அதற்குள் அவனே சிக்கிக் கொள்கிறான். அவரவர் வாழ்க்கையின் சிற்பி அவரவர் எண்ணங்களே.


- அருட்தந்தை


                     நம்மையும் நம்மைச் சுற்றியுள்ள புறத்தையும் உள்ளதை உள்ளவாறு உணர்வதற்கான பக்குவத்தை பெறுவதற்கான பயிற்சிதான் ‘தவம்’ . அறிய வேண்டியவைகளை முழுமையாக அறியப்பெற்று செய்யவேண்டிய செயல்களை நெறிபிறழாமல் செய்ய நம்மைத் தூண்டுவதே ‘தவம்’ ஞானம் பெருகி அஞ்ஞானத்தின் அவலம் குறைகிறது. கானகம் சென்றுதான் ‘தவம்’ செய்யவேண்டுமா? வேண்டாம்! இல்லறத்திலிருந்தே ‘தவம்’ செய்யலாம் தவத்தில்தான் ‘அமைதி’யான மனம் நமக்கு அமைகிறது. அந்த அமைதியால்தான் இல்லறத்தின் ஒவ்வொரு செயலிலும் இனிமையைக் காண்கின்ற பக்குவத்தை பெறமுடியும். ஞானிகள்தான் ‘தவம்’ இயற்றவேண்டுமா? இல்லையில்லை! குடும்பத்தாறுக்கே தவமும், அகத்தாய்வும் (தற்சோதனை) மிகவும் அவசியம் மன அமைதிக்கு அகத்தவமும், வினைத்தூய்மைக்கு அகத்தாய்வும் தேவை.அகத்தவம் மன ஆற்றலை பெருக்கும் அகத்தாய்வு மன ஆழுக்கை நீக்கும் !
இரண்டையும் பெற அன்பர்களே வாரீர் ! ‘தத்துவம், விஞ்ஞானம், வாழ்க்கை நெறி ‘ இவை பற்றிய சிந்தனைத்தூண்டல் தான் மனவளக்கலை தவ மையங்கள், அறிவுத்திருக் கோயில்களில் தரப்படுகிறது.

- மகரிஷி