வாழ்க வளமுடன்

  பருவமழை பொழிகிறது; ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தோடுகிறது; வெள்ளம் அதிகமாக இருந்தால் விளைநிலங்களில் பரவிப் பயிர்களை அழித்து விடும். ஆற்றுவெள்ளம் கரைபுரண்டால் ஊர்களிலே பாய்ந்து வீடுகளை மூழ்கடித்துவிடும்; மக்கள், மாடுகள், ஆடுகள் இவற்றிற்கும் அழிவைத் தரும்.

        அதே ஆற்றை ஒரு அணைக்கட்டு (Dam) கட்டி நீரைத் தேக்கிக் கால்வாய்களை அமைத்து நீர்போக்கைக் கட்டுப்படுத்திக் கொண்டால் என்ன வியத்தகு மாற்றம்!  எவ்வளவு நன்மை விளைகிறது!  ஆண்டு முழுவதும் வயலுக்குப் பாய்ச்சுவதற்கு நீர் கிடைக்கிறது, குளிக்கவும் அருந்தவும் மக்களுக்குத் தண்ணீர் கிடைக்கிறது. ஆற்றுக்கால் பகுதியிலுள்ள ஊர்களெல்லாம் வளம் பெற்றுச் செல்வம் கொழிக்கிறது.

         இவ்வாறே மனிதனுடைய ஆற்றல் எல்லையற்றது. இதனை வேறு எதனோடும் ஒப்பிட்டுக் கணித்து உவமை கூற முடியாது. மனிதனிடம் அடங்கியுள்ள ஆற்றல் அத்தகைய பெருமையுடையது; இயற்கையின் பெருநிதியாகும் அது. அதை உணர்ந்து கட்டுப்படுத்தித் தேக்கி முறையாகச் செலவிட வழி கண்டு விட்டால், வாழ்நாள் முழுவதும் உடல்நலம் காக்கலாம், மனவளம் பெருக்கலாம். வாழ்வில் வெற்றி, மகிழ்ச்சி, இன்பம், அமைதி இவற்றை அடையலாம்.

         இவ்வாறு ஒழுங்குபடுத்தப்பட்ட மனிதனுடைய ஆற்றல் அவன் குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் வளம் பெருகும் ஊற்றாக அமையும். மனிதனுடைய இத்தகைய பேராற்றலைக் கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்தித் திட்டமிட்ட  முறையில் செயல்படுத்திப் பயன் காணவல்ல ஒரு உளப் பயிற்சியையே "தியானம்" என்று கூறுகிறோம்.
--  யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

3 Responses to "உளப் பயிற்சி"

  1. gravatar என்னது நானு யாரா? Says:

    தினம் தினம் மகரிஷியின் கருத்துக்களை அழகாகத் தொகுத்து வெளியிடுகிறீர்கள். Template-ம் அருமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள் நண்பரே!

  2. gravatar Anonymous Says:

    மிக நல்ல பதிவு.


    http://denimmohan.blogspot.com/

  3. gravatar கோமதி அரசு Says:

    வாழ்க வளமுடன்!

    மகரிஷியின் உளப் பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் வாழ்வில் எல்லா நலமும் வந்து சேரும்.

    நன்றி.