வாழ்க வளமுடன்

சிக்கலை விரைவாகத் தீர்த்துவிட வேண்டி உணர்ச்சிவயப்பட்டுச் செயலாற்றினால் பெரும்பாலும் அச்சிக்கல் பெருகி விடும். மனிதன் எப்போதும் தன் செயலால் எந்தச் சிக்கலையும் முடிவுக்குக் கொண்டு வருவதில்லை. எங்கு ஒரு சிக்கலை முடித்ததாக எண்ணுகிறானோ அங்கேயே, அதன் வேரிலேயே மற்றொன்று முளைத்து விடும்.

         மகளுக்குத் திருமணம் முடிந்துவிட்டால், தனது கவலையெல்லாம் தீரும் என ஒருவர் எண்ணுவார். ஆனால், மணம் முடிந்த பின்னர் எத்தனைச் சிக்கல்கள் எழுகின்றன. வீடு ஒன்று கட்டிவிட்டால், இரண்டு ஏக்கர் நிலம் வாங்கிவிட்டால், இதுபோன்றே ஏதோ விரும்பியதை அடைந்து விட்டால் வாழ்வில் கவலைகள் தீரும் என்று கற்பனை செய்து கொள்வோம். ஆனால், உண்மை என்ன?  எதை முடிப்பதாக எண்ணுகிறோமோ, அங்கேயே இன்னொன்று தொடங்கி விடும். அதிலிருந்து பல கவலைகள் கிளைவிடுவதும் உண்டு.

         எல்லாச் சிக்கல்களுக்கும் முடிவு இயற்கையிலேதான் உண்டு. ஒவ்வொருசிக்கலையும் வெற்றி கொள்வது தெளிந்து தேர்ந்த அறிவேயாகும். அத்தகைய அறிவு எல்லோரிடமுமிருக்கிறது. அதைத் தூண்டி, அதையே வலுவுள்ள ஆயுதமாகக் கொண்டு கவலைகளை ஒழித்து வாழ்வில் அமைதியும், மகிழ்ச்சியும் பெறுவோம்.
--  யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

முதன் முதலில் மனித இனத்திற்குத் தெய்வம் என்ற மதிப்பில் இருந்தது உணவு தான். பிறகு, உணவு நிலத்திலிருந்து தான் விளைகின்றது என்றறிந்த போது நிலத்தைத் தெய்வமாக மதித்தான், வணங்கினான். பிறகு நீர் இன்றி உணவுமில்லை, வாழ்வுமில்லையென்று கண்ட போது நீரையும் தெய்வமாகக் கருதினான். பின்னர் தான் நெருப்பின் மதிப்பையும் அதை அலையாக வீசும் சூரியனையும் மதிக்கத் தொடங்கினான்.

               மேலும் பல்லாயிரம் தலைமுறைகள் சென்ற பின்னர் காற்றின் மதிப்பை உணர்ந்தான். காற்றையும் தெய்வமாக வணங்கினான். காற்றில் மூலத்துகளாக விளங்கும் விண்ணை உணரப் பல இலட்சம் தலைமுறைகள் சென்று விட்டன. சிந்திக்கச் சிந்திக்க அறிவு உயர்ந்தது. தோற்றங்கள் அனைத்தும் விண்ணின் கூட்டுத்தான் என்ற தெளிவு வந்தபோது விண்ணை விடப் பேரியக்க மண்டலத்தில் வேறு என்ன உள்ளது என்ற சிந்தனையில் எல்லையற்ற இறைவெளி அவன் அறிவுக்கு எட்டியது. வெளியிலிருந்து விண் தோன்றி இருக்குமா?  அல்லது விண்ணிலிருந்து வெளி தோன்றியிருக்க முடியும் என்ற முடிவுக்கு வந்தான்.

              இந்த அறிவு நிலைக்கு வருவதற்குள் இந்த நில உலகில் எத்தனையோ மாற்றஙகள் மனித வாழ்வில் நிகழ்ந்து விட்டன. முடிவாகக் கண்ட தெளிவு இறைவெளிதான் தெய்வம். அது அரூபமானது. எங்கும் நிறைந்தது. அதிலிருந்து தான் விண் முதல் அனைத்தும் தோன்றி அந்த இறைவெளியிலேயே மிதந்து இயங்கிக் கொண்டிருக்கின்றன. உலகில் வாழும் எல்லோரும் ஒரே மூலத்திலிருந்து வந்தவர்கள் தான் என்ற கருத்துப் பரவியது.
--  யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

இயற்கைத் தத்துவத்தையும், அதன் விளைவுகளையும் அன்றாடம் வாழ்வில் நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். இயற்கையின் விளைவுகளுக்குத்  தொடர்ந்து ஆளாகிக் கொண்டும், சில நேரங்களில் பயன்படுத்திக் கொண்டும் வருகின்றோம். இதனைச் செயல் விளைவுத் தத்துவம் என்று சொல்லலாம். விதி என்றும் சொல்லலாம். தெய்வச் செயல் என்றும் சொல்லலாம். வினை அல்லது வினைப் பயன் என்றும் இதை மதிக்கலாம்.

                இயற்கையை எவ்வளவுக்கெவ்வளவு நாம் அறிந்து கொள்கிறோமோ, அவ்வளவுக்குத் தான் நம் மனம் விரிவும், திண்மையும் பெறும். மனதின் திண்மைக்கு ஏற்பவே செயல் திறம் அமையும். செயல் திறமைக்கு ஏற்ப வாழ்க்கையானது வெற்றியும், மகிழ்ச்சியும் நிரம்பியதாக விளங்கும்.

                மனிதனின் துன்பமெல்லாம், அவனுடைய குறையெல்லாம் இயற்கையை அறியாமலும் அல்லது அறிந்தும் அதனை மதியாமலும் அவன் நடந்து கொள்வதாலேயே தோன்றுகின்றன. இந்நிலையைத்தான். ஆணவம் என்பார்கள். நாம் இதனைத் "தன்முனைப்பு" (Ego) என்கிறோம்.

                உலக உயிர்கள் அனைத்திலும் மனிதன் மிகவும் உயர்ந்தவன் இயற்கையின் பரிணாமச் சிறப்புகள் அனைத்தும் அவனிடம் ஒருங்கிணைந்துள்ளன. மனிதனிடம் இவ்வளவு பேராற்றல் இருந்தும் அவன் தன் ஆற்றலின் பெருமையை, தன் ஆற்றலின் முழுமையை மறந்திருக்கிறான். அதனால் அப்பேராற்றல் அவனிடம் இயக்கம் பெறாமல் பலங்குன்றியிருக்கின்றது. இதைமூடநிலை எனலாம். மூடம் என்றால் மறைவு என்று பொருள். மூடன் என்றால் அறிவு இருந்தும் அது அவனிடம் இயக்கம் பெறாமல் இருப்பவன். அறிவு இருப்பது வெளிப்படாமல் அதாவது மறைவாக இருக்கும் நிலையில் உள்ளது. இயக்கம் பெறாமல் தடைபட்டிருக்கும் நிலையாகும்.

               தன்முனைப்பின் காரணமாக மனிதனானவன் தன் பேரறிவைதத் தன் உடல் அளவில் குறுக்கிக் கொண்டு, பொருள் அனுபோகத்திலும் புலன் அனுபோகத்திலும் மட்டுமே கவனம் கொள்ளச் செய்கிறது. அப்போது அவனது பேரறிவானது வெறும் பொருள் வழி மற்றும் புலன்வழி குறுகித் தன் உயர்வையும், சிறப்பையும் இழந்துவிடுகிறது.
--  யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

உலகில் வாழும் உயிரினங்கள் பல கோடியாகும். அவற்றுள் மனித இனம் மேலானது. தொழில்களைத் திறன்படச் செய்வதற்கான துணைக் கருவிகளையும், ஆராய்ச்சிக்கு விஞ்ஞான அறிவோடு நுண்கருவிகளையும் உபயோகிக்கக்கூடிய வகையில் உடல் உறுப்புக்கள் மனிதனிடம் அமைந்துள்ளன. மேலும் ஊறு, ஒலி, ஒளி, சுவை, மணம் ஆகிய ஐந்தையும் உணரும் ஐயுணர்வோடு, மனம், உயிர், மெய் எனும் மூன்று மறை பொருட்களை உணரத்தக்க ஆறாம் அறிவும் மனிதனிடம் அமைந்துள்ளது.

             இத்தகைய சிறப்புகளை உணரும்போது தான் ஒரு பேருண்மை தெளிவாகின்றது; இயற்கையே தன் பரிணாமத்தின் உச்சகட்டமாக மனித வடிவில் வந்து, தனது இயல்புகளை ரசித்தும், பெருமைகளை உணர்ந்தும் நிறைவு பெறுகிறது என்ற உண்மை விளங்குகிறது. இவ்வளவு சிறப்புகளையும் பெற்ற மனிதனின் பிறவி நோக்கம், தனது அறிவில் முழுமை பெற்று, இயற்கையின் சிறப்பு உணர்ந்து அமைதியும், நிறைவும் பெறுவதேயாகும். மனிதனுடைய வாழ்வில் துன்பங்கள் மிகுமேயானால் பிறவியின் நோக்கமாகிய அறிவின் வளர்ச்சி தடைப்படும். அறிவானது அமைதியான வழியில் இயங்க நாம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

              இயற்கையாக எழும் தேவைகள் மூன்று. அவை :- பசி, வெப்ப தட்ப ஏற்றத்தாழ்வு உணர்வு, உடல் கழிவுப் பொருட்களின் உந்துவேக உணர்வு. இந்த மூன்று உணர்வுகளையும் காலத்தோடும், அளவோடும், தக்க பொருட்களையும், வசதிகளையும் கொண்டு (with appropriate facilities and commodities) நிறைவு செய்து கொண்டேயிருக்க வேண்டும். மேலே விளக்கப் பெற்ற பசி உணர்வு, வெப்ப தட்ப ஏற்றத்தாழ்வு உணர்வு, உடல் கழிவுப் பொருட்களின் உந்துவேக உணர்வு இவைகளைக் காலத்தோடு நிறைவு செய்யாவிட்டால், உடலில் அமைதி குலைந்து நலம் கெட்டுத் துன்ப உணர்வுகளாக மாறும்.

              இயற்கைத் துன்பங்களை அவ்வப்போது சமன் செய்து கொண்டே இருப்போமானால் மிகுதி இருப்பது என்ன?  அமைதியும், இனிமையும் தாமே! அமைதியே அறிவு ஆராய்ச்சிக்கும், உயர்வுக்கும் ஒத்ததாகும். எனவே, அமைதி காப்பது என்பதே மனிதனின் தலையாய செயல்.
--  யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

உடலை நலத்தோடு வைத்துக் கொள்ள வேண்டுமாயின் உடலுக்கும், உயிர்ச்சக்திக்கும் இடையே உள்ள இரத்தம், வெப்பம், காற்று ஆகிய மூன்றுக்கும் ஊறுநேராதபடி பாதுகாத்துக் கொள்வது அவசியம் ஆகிறது. இயற்கைச் சக்திகளின் விளைவாலோ அல்லது ஐம்புலன்களின் விளைவாலோ இரத்தம், வெப்பம், காற்று ஆகிய மூன்றுக்கும் சீர்குலைவு ஏற்படுகின்றது. உணவு, உறக்கம், உழைப்பு, பால் உறவு இவற்றை மிகையாகப் பயன்படுத்துவதாலும், தவறாகப் பயன்படுத்துவதாலும், நமது செயல்களின் விளைவாகத் தொந்தரவுகள் நேரலாம்.

        பருவ வேறுபாடு, பரம்பரை உணர்ச்சிப் பதிவு, வானில் கோள்களின் ஓட்டத்தில் ஏற்படும் நிலைமாற்றம் இவற்றால் உண்டாகும் காந்த அலை அதிர்வுகள், அவற்றின் சேர்க்கையின் விளைவுகள் இவை இயற்கைச் சக்தியால் நேரும் பாதிப்புகள் ஆகும். இந்த விளைவுகளிலிருந்து காக்க இயற்கை சில தடுப்பு வசதிகளைச் செய்து வைத்திருக்கிறது. இந்தத் தடுப்பு வசதிகளையும் கடந்து போகும் நிலை உண்டானால் உடல் கெடுகிறது. பாதிப்புகள் ஏற்படுவதைக் கூடுமான வரை நமது செயல்களால் நாம் தடுத்துக் கொள்ள முடியும். சில சமயங்களில் சந்தர்ப்பவசத்தால் நாம் செயல்படும் பொழுது, தடுப்பு நிலையை நாம் கடந்து விடுகிறோம். இயற்கைச் சக்திகளால் ஏற்படும் விளைவுகளைத் தடுத்துக் கொள்ள நாம் சில பயிற்சிகளைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்வதனால் நாம் அறிய முடியாத நிலையில் ஏற்படும் இயற்கைச் சக்திகளின் விளைவுகளையும் நாம் செய்த தவறுகளால் ஏற்படும் விளைவுகளையும் தடுப்பு நிலையை உயர்த்தி, உடல் நலக்கேடு ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதைப் பல நூற்றாண்டுக்கு முன்பே மனிதன் தெரிந்து கொண்டிருக்கிறான். தவிர்க்க முடியாத காரணங்களால், தான் நோய்வாய்ப்பட நேர்ந்தால் இயற்கைச் சக்திக்கு உதவுவதன் மூலம் நோயை விரைவிலும், வெற்றிகரமாகவும் குணப்படுத்திக் கொண்டு, உடல் நலத்தை விரைவில் பெற்றுவிடலாம்.
--  யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

மனிதன் என்ற தத்துவத்தை நான்கு சிறப்பு நிலைகளாகப் பிரிக்கலாம். அவை 1)உடல் 2)உயிர் 3)மனம் 4)மெய்ப்பொருள் என்பனவாகும். இந்நான்கும் பொருள் நிலையில் ஒன்றுதான். ஆனால், இயக்கச் சிறப்புகளால் பிரித்து உணரத் தக்கவையாக இருக்கின்றன. ஒரே பொருள் அதன் இயல்பான பரிணாம உணர்ச்சியால் நான்கு நிலைகளையும் அடைந்து ஒன்றில் ஒன்றாக நான்கும்இணைந்து இயங்கும் சிறப்பே மனிதனாக விளங்குகின்றது.

                 உடல் என்பது ஆற்றலின் (Mass) திரட்சியே. ஆற்றல் (Energy) என்பது மெய்ப்பொருளின் இயக்க நிலையே. மெய்ப்பொருள் தான் ஆற்றவுக்கு நிலைக்களம் (Static State). இதனை வெட்டவெளி என்கிறோம். வெட்ட வெளியே தனது இயக்கத்தில் ஆற்றல் ஆகிறது. ஆற்றலின் திணிவு உடல். உடலில் நிறைந்த ஆற்றல் உணர்ச்சியெனும்  சிறப்புற்று உடலை உணர்ந்து, பேரியக்க மண்டலத் தோற்றங்களை உணர்ந்து, உணரும் ஆற்றலான உயிரையும் உணர்ந்து முடிவாகத் தனது மூலநிலையான மெய் நிலையை நிலைக்களனாக உள்ள ஆதிநிலையை உணர்ந்து முழுமை பெறுகிறது.

                  உணர்ச்சியிலிருந்து முழுமை பெறும் வரையில் நடைபெறும் சிறப்பாற்றல் தான் மனம் (Mind) என்றும், அறிவு (Consciousness) என்றும் வழங்கப்படுகின்றது. எனவே மெய்ப்பொருள், ஆற்றல், தோற்றம், மனம் (Truth,Energy,Mass,Consciousness) என்ற நான்கு நிலைகளும் ஒரு பொருளின் பரிணாம வளர்ச்சியின் வேறுபாடுகளே. இந்த விளக்கத்தையே பேரியக்க மண்டல இயக்கங்கள் அனைத்தையும் மதிப்பிட அடிப்படையாகக் கொள்ளலாம்.

                 நுண்ணிய இயக்க ஆற்றலான பரமாணு முதல் பெரும் பெரும் நட்சத்திரங்கள் உட்பட மனதில் கொண்டு ஆழ்ந்து ஆராய்ந்தால் ஒரு பேருண்மை விளங்கும். ஒவ்வொரு அணுவும் அல்லது அணுக்கொத்தும் தன்னியக்கம், தொடரியக்கம், பிரதிபலிப்பு இயக்கம், விளைவு என்ற நான்கு வகையான தன்மைகளோடு இயங்குகின்றன. எந்த ஒரு இயக்கமும் தனியாகத் துண்டுபட்டு நடைபெறுவதில்லை. பேரியக்க மண்டலம் என்ற கோர்வையில் அமைந்துள்ள இயற்கை ஒழுங்கமைப்பை நாம் காரண - விளைவு நியதி (Cause - and - effect system) என்று கூறுகிறோம்.

               இந்த விளைவின் கீழ் தோன்றிய மனிதனின் நோக்கம் அறிவின் முழுமை பெற்று அமைதி பெறுவதேயாகும். அறிவின் முழுமைக்கு வாழ்க்கை அனுபவம் வேண்டும். அவ்வணுபவத்திற்கு உடல் என்ற நற்கருவியை நன்றாகப் போற்றி காத்து பயன்படுத்த வேண்டும். எனவே மனிதன் தனது நோக்கத்தை ஒட்டி இயல்பாக வாழ்ந்து அமைதியும், மகிழ்ச்சியும் பெற வேண்டுமெனில் அறிவில் முழுமை பெறுவது, உடலைப் பொறுப்போடு காப்பது என்ற இரண்டு வகையிலும் உணர்ந்தாற்ற வேண்டும்.
--  யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி