வாழ்க வளமுடன்

    நாம் ஆன்மீக வாழ்வு நடத்த முயழ்கிறோம். மற்றவர்கள் அவரவர்
வழியில் நடப்பார்கள். நம் குடும்பத்திலேயே கூட அத்தகையவர்கள்
இருப்பார்கள். மற்றவர்களின் வழியால் நம் ஆன்மீக வாழ்வு பாதிக்கப்படக்
கூடாது. அவ்விதமாக - எல்லோருக்கும் ஒத்ததாக நம் வாழ்வு முறையை
அமைத்துக் கொள்ள வேண்டும். அதே சமயத்தில் நம் வாழ்வு ஆன்மீக
வாழ்வாக இருக்க வேண்டும்.

       மனவளக்கலையை நான் வகுத்த போது, குடும்பத்திலிருந்து அமைதி
தொடங்கி, சமுதாய விரிவாக அது அமைய வேண்டும் என்ற நோக்கத்தோடு
திட்டமிட்டுத்தான் அதனை வகுத்தேன்.

      உலக சமாதானம் வேண்டுமானால் முதலில் அதற்கு மனித சமுதாயத்தில்
அமைதி வந்தாக வேண்டும். தன்னிலை விளக்கத்தின் மூலம் தான் அந்த
அமைதி வரமுடியும். தன்னிலை விளக்கத்தை நீங்கள் பெற்றுள்ளீர்கள்.
அதனைப் பெற்று விட்டால் மட்டுமே அமைதி வந்து விடாது. தன்னிலை
விளக்கம் என்ற விளக்கின் வெளிச்சத்தில் உங்கள் வாழும் முறையைச்
சோதித்துக் கொள்ள வேண்டும். அவ்வெளிச்சத்தில் உங்கள் வாழ்க்கையைத்
திட்டமிட்டு நடத்த வேண்டும்.

     '' உங்கள் குடும்பத்தில் அமைதி இருக்கிறதா? பிணக்கிருக்கிறதா?'' என்று
ஆராயுங்கள். எல்லோரது வாழ்க்கையிலும் பிணக்குத்தான் மலிந்திருக்கிறது.
பிணக்கானது சிலர் வாழ்க்கையில் சிறிதாயிருக்கலாம். வேறு சிலரது
வாழ்க்கையில் பெரிதாயிருக்கலாம். ஆகவே, பிணக்கில்லாத வாழ்க்கையை
எவன் அமைத்து அதன்படி வாழ்கிறானோ அவன்தான் ஞானி. ஒருவர் பெற்ற
ஞானத்தைப் பரிசோதிக்கக் கருவி ஒன்று இருக்குமானால் அது அவரது
குடும்ப அமைதி தான்.

--  யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

No Responses to "குடும்ப அமைதியே ஞானத்திற்கு வழி"