வாழ்க வளமுடன்

வயிறானது எப்பொழுதுமே நிறைந்திருக்க வேண்டும் என்பது தவறான எண்ணம். இந்தப் பழக்கத்திதனால் என்ன ஆகும் என்றால் உணவு கொஞ்சம் குறைந்து விட்டாலும் ஏதோ இழந்து விட்டது மாதிரி இருக்கும். அதைப் போட்டு நிரப்பி விட்டுத் தவிக்கிற வரைக்கும் மனதுக்குத் திருப்தி இருக்காது.

       நமக்கு வரக்கூடிய உயிர்ச்சக்தி தினம்தோறும் செலவாகிக் கொண்டே இருக்கிறது. வந்துகொண்டேயும் இருக்கிறது. அது உணவிலே இருந்து ஒரு பகுதி, காற்றில் இருந்து இன்னொரு பகுதி, கோள்களில் இருந்து வரக் கூடிய அலைகளாக (Astronomical radiations) சேர்ந்து வர அவை துகள்களாகி அது ஒரு பகுதி, பூமியின் நடு மையத்திலிருந்து (Atomic fission) அணுக்கள் உடைகிற போது அதிலிருந்து தெறிக்கக் கூடிய அந்தத் துகள்கள் எல்லாம் பூமியினுடைய மேல்பக்கம் தான் நோக்கி வரும். அதிலேயிருந்து ஒரு பகுதி - ஆக நான்கு வகையிலே நம் உடலில் உள்ள சிற்றறைகள் (cells) நமக்குத் தேவையான உயிர்ச் சக்தியை அவ்வப்போது தேவையான அளவுக்கு ஏற்றிக் கொள்ளும். இந்த நான்கில் ஒவ்வொன்றுக்கும் ஒருவிதமான கனம் (density) உண்டு. அறிவுக்கும் உடலுக்கும் உகந்த விகிதத்திலே இவை ஈர்க்கப்பட வேண்டும். உணவை மாத்திரம் எப்போதும் நிரப்பி வைத்துவிட்டால் மற்ற மூன்று வகையில் இருந்து வருவதைத் தடுத்து விடுகிறோம். அப்படித் தடுத்து விடுவதனால் சில குறைபாடுகள் விளைகின்றன. சிலருக்குக் கால்சியம் சத்துக் குறைவாகவுள்ளது. இரும்புச் சத்துக் குறைவாகவுள்ளது (Calcium deficiency, iron deficiency) என்றெல்லாம் நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். பலவிதமான உலோகச் சத்துக்கள், இரசாயனங்கள் எல்லாம் உடலுக்குத் தேவை. அவை குறைந்துவிட்டால் நோய் வரும். அதனால் எந்த உணவு சாப்பிட்டாலும் அது சுத்தமாயும் நல்ல சத்துடையதாகவும் இருக்க வேண்டும். போஷாக்கு என்பது உணவின் அளவைப் பொறுத்ததன்று. நீங்கள் ஜீரணம் செய்து பழகிய உணவாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் அடுத்த முறை உணவு எடுக்கும் போது ஒரு மணி நேரம் முன்னதாகவே பசி இருக்க வேண்டும். அதுதான் அளவு, முறை. ஒரு மணி நேரம் தினந்தோறும் இரண்டு வேளையும் பசி இருந்தால் அந்த நேரத்தில் உணவில் இருந்து ஜீவகாந்த சக்தியை இழுக்க முடியவில்லை என்றால் உடல் தானாகவே காற்றில் இருந்து, கோள்களின் அலை வீச்சிலிருந்து சக்தியை எடுத்துக் கொள்ள முடியும். அப்பொழுதுதான் அறிவுக்கு விருந்தாக, சிந்தனைக்கு ஏற்ற விருந்தாக நல்ல சக்தி நமக்குக் கிடைக்கும். வயிற்றை மட்டும் நாம் நிரப்பிக் கொண்டிருந்தால் உலக விவகாரங்களில் உழைக்கிறது என்ற வரைக்கும் தான் வரும். அதற்கு மேலே சிந்தனை ஆற்றல் நமக்கும் பெருகுவது சிரமம். சிந்தனைஆற்றலே மனிதனின் சிறப்பு.

--யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

No Responses to "நால்வகை ஆற்றல் வரவு"