வாழ்க வளமுடன்

உலகில் வாழும் உயிரினங்கள் பல கோடியாகும். அவற்றுள் மனித இனம் மேலானது. தொழில்களைத் திறன்படச் செய்வதற்கான துணைக் கருவிகளையும், ஆராய்ச்சிக்கு விஞ்ஞான அறிவோடு நுண்கருவிகளையும் உபயோகிக்கக்கூடிய வகையில் உடல் உறுப்புக்கள் மனிதனிடம் அமைந்துள்ளன. மேலும் ஊறு, ஒலி, ஒளி, சுவை, மணம் ஆகிய ஐந்தையும் உணரும் ஐயுணர்வோடு, மனம், உயிர், மெய் எனும் மூன்று மறை பொருட்களை உணரத்தக்க ஆறாம் அறிவும் மனிதனிடம் அமைந்துள்ளது.

             இத்தகைய சிறப்புகளை உணரும்போது தான் ஒரு பேருண்மை தெளிவாகின்றது; இயற்கையே தன் பரிணாமத்தின் உச்சகட்டமாக மனித வடிவில் வந்து, தனது இயல்புகளை ரசித்தும், பெருமைகளை உணர்ந்தும் நிறைவு பெறுகிறது என்ற உண்மை விளங்குகிறது. இவ்வளவு சிறப்புகளையும் பெற்ற மனிதனின் பிறவி நோக்கம், தனது அறிவில் முழுமை பெற்று, இயற்கையின் சிறப்பு உணர்ந்து அமைதியும், நிறைவும் பெறுவதேயாகும். மனிதனுடைய வாழ்வில் துன்பங்கள் மிகுமேயானால் பிறவியின் நோக்கமாகிய அறிவின் வளர்ச்சி தடைப்படும். அறிவானது அமைதியான வழியில் இயங்க நாம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

              இயற்கையாக எழும் தேவைகள் மூன்று. அவை :- பசி, வெப்ப தட்ப ஏற்றத்தாழ்வு உணர்வு, உடல் கழிவுப் பொருட்களின் உந்துவேக உணர்வு. இந்த மூன்று உணர்வுகளையும் காலத்தோடும், அளவோடும், தக்க பொருட்களையும், வசதிகளையும் கொண்டு (with appropriate facilities and commodities) நிறைவு செய்து கொண்டேயிருக்க வேண்டும். மேலே விளக்கப் பெற்ற பசி உணர்வு, வெப்ப தட்ப ஏற்றத்தாழ்வு உணர்வு, உடல் கழிவுப் பொருட்களின் உந்துவேக உணர்வு இவைகளைக் காலத்தோடு நிறைவு செய்யாவிட்டால், உடலில் அமைதி குலைந்து நலம் கெட்டுத் துன்ப உணர்வுகளாக மாறும்.

              இயற்கைத் துன்பங்களை அவ்வப்போது சமன் செய்து கொண்டே இருப்போமானால் மிகுதி இருப்பது என்ன?  அமைதியும், இனிமையும் தாமே! அமைதியே அறிவு ஆராய்ச்சிக்கும், உயர்வுக்கும் ஒத்ததாகும். எனவே, அமைதி காப்பது என்பதே மனிதனின் தலையாய செயல்.
--  யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

No Responses to "இன்பமும் துன்பமும்"