வாழ்க வளமுடன்

ஆத்மதாகம் கொண்ட மனிதன் இந்த நினைப்பிலே உருகி நிற்கும் போது, அந்த நினைப்பானது குருவை அவன் முன் கொண்டு வரும். குரு வருவதற்கு வேறு மார்க்கமேதும் கிடையாது.

ஓர் ஏற்புத் தன்மை இருந்தால் குருதானே இங்கே வருவார். எனவே, குருவைத் தேடி அலைய வேண்டியதில்லை. தன்னை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உயரட்டும். தானாகவே அவனுடைய எண்ணம் உயர்நிலையில் பக்குவப்படட்டும். குரு தானாக வருவார்.

மனிதனுடைய எண்ணம் என்பது என்ன? அது பிரம்மத்தினுடைய சாயை தானே? இயக்கம் தானே எண்ணமாக, அறிவாக இருக்கிறது? உணர்ந்த நிலையில் அறிவாகவும், மயக்க நிலையில் மனமாகவும் அதுவே குறிப்பிடப்படுகிறது. அது தானாக அமர்ந்த நிலையில் பிரம்மமாக உள்ளது. பக்குவப்பட்டவன் நினைத்தால் குருவர வேண்டியதுதானே? (Fraction demands and Totality Supplies).

நம் முன்னோர்கள் செய்த தவப்பயனே குண்டலினி யோகம்

அவ்வாறு குரு வரவேண்டியதைத் தடுப்பது எது? ஏற்கனவே எண்ணியிருந்த எண்ணங்களால் உருவான ஒரு மேடு மத்தியிலே தடுக்கிறது. இதைக் கணித்து உணர்ந்து கொண்டு நல்லதிலேயே மனதை நிலைக்கச் செய்யப் பழகிக் கொள்ள வேண்டும். உங்களுடைய நல்ல கர்மத்தின் விளைவாகத் தான் நீங்கள் இந்த மனவளக்கலையை ஏற்று இருக்க முடியும். அது நீங்கள் நேரடியாகச் செய்த தவப்பயனாக இருக்கலாம்; அல்லது உங்களது பெற்றோர்களுடைய தவப்பயனால் உங்களுக்கு இந்த உணர்வு நிலை கிட்டியிருக்கலாம். பெற்றோர்கள் மூலமாகக் கிட்டும் போது அதை நமது தமிழகத்துப் பெரியவர்கள் "கருவில் திரு உடையார்" என்று ஒரே சொற்றொடரில் வர்ணித்தார்கள்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

No Responses to "கருவில் திரு உடையார்"