வாழ்க வளமுடன்

நமது உடலுக்குள்ளாக இயங்கக் கூடிய உயிராற்றல், அலையாக ஜீவகாந்த சக்தியின் மூலம் எந்தப் பொருளோடு தொடர்பு கொண்டாலும், அந்தப் பொருளின் தன்மைக்கேற்ப மாற்றம் பெறும். நமக்குத் தெரிந்தோ, தெரியாமலோ, எப்பொழுதுமே, கோள்களிடமிருந்தும், பொருட்களிடமிந்தும், மக்களிடமிருந்தும் அலைகள் வந்து கொண்டேயிருக்கும். அந்த அலைகள் சாதகமாகவும் இருக்கலாம், பாதகமாகவும் இருக்கலாம்.

பாதகம் என்பது வெளியிலிருந்து வரக்கூடிய ஆற்றல். நம்மிடையே இருக்கிற ஆற்றல் மீது அதிக அழுத்தம் தருமானால், அதைத் தாங்க முடியாதபோது ஒரு துன்பத்திற்குரியதாக மாறுகிறது. அதைத் தாங்கும் போது அதுவே இன்பமாக மாறுகிறது. நமக்கு எப்பொழுதுமே கோள்களிலிருந்து வரக்கூடிய அலையினாலும், பொருட்களிலே இருந்து வரக் கூடிய அலையினாலும், நாம் செய்கின்ற செயல்களிலேயிருந்து வரக் கூடிய அலையினாலும், அதிகமாகப் பாதிக்கப்படாத ஒரு Steadiness தாங்கும் சக்தி (resistance power) அவசியம்.

அந்த ஆற்றலை ஏற்படுத்திக் கொள்வதற்காக நாம், நமது உடல், உயிர், ஜீவகாந்தம், மனம் இந்த நான்கையும் சேர்த்து ஒவ்வொரு பெளதீகப் பிரிவோடும் இணைக்க வேண்டும். உதாரணமாக, நிலம் என்ற மண்ணை எடுத்துக் கொண்டு அதையே நினைந்து, நினைந்து, நினைந்து மண்ணிலேயிருக்கக்கூடிய ஆற்றலுக்கும், நமக்கும் உறவை ஏற்படுத்தி, எப்போதும் நாம் தூங்கும்போதும், விழித்துக் கொண்டிருக்கும் போதும், எங்கே சென்றாலும் மண்ணிலிருக்கக் கூடிய ஆற்றல் நமக்கு உதவியாகத் தான் இருக்க வேண்டும். நன்மை தான் செய்ய வேண்டும் என்று சங்கற்பம் (Auto Suggestion) செய்து கொள்ள வேண்டும்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

No Responses to "அலையின் தன்மை"