வாழ்க வளமுடன்

எனது வாழ்க்கை விளக்கம்:


ஒருவர் வாழ்க்கை வரலாற்றைப் பிறர் எழுதும்போது அவர் கையாளும் முறை வேறு. உள்ளத்திலெழும் பக்தியால், அன்பால் வரவாற்றுக்குரியவர் புகழ் ஓங்க வேண்டுமெனும் நோக்கத்தோடுதான், எழுதுவார். சில இடங்களில் அவர் வாழ்வில் நடைபெற்ற நிகழ்ச்சிகள், படிப்பவர்களுக்குப் படிப்பினையாக அமையவும் கூடும். வரலாற்றுக்குரியவர் ஆற்றிய தவறுகளோ, இழிவான செயல்களோ, அவர் பிறருக்குப் புரிந்த கொடுமைகளோ, மற்றும் அவர் சிறுமை விளக்கும் நிகழ்ச்சிகளோ, எழுத்திற்கு வராது. அப்படி எடுத்துக் காட்டி எழுதுவதும் முறையன்று. ஆனால் ஒருவர் தானே தனது வரலாற்றை எழுதும்போது, எல்லா உண்மைகளையும் எழுதியே ஆகவேண்டும். பெருமைக்கோ சிறுமைக்கோ அங்கே இடமில்லை. இத்தகைய வரலாறுகளைப் படிக்கும் போது, அது படிப்போர் சிந்தனையை உயர்த்தும் இலக்கியமாகிவிடும். அறிவிற்கு வளம்தரும் வலிவூட்டும் மருந்தாக இருக்கும். வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகள் பல அமைந்த உலக இயல்பை வெளிப்படுத்தும் சிக்கல்களால் பின்னப்பட்ட சம்பவங்கள் நிறைந்திருக்கும். இத்தகைய வரலாறுகளைப் படிப்பவர்களுக்கு வாழ்வில் ஒரு நம்பிக்கை ஒளி தோன்றும். ஆட்சிச் சட்டம், மதச் சட்டம் இரண்டால் அமைக்கப் பெற்ற சமுதாயத்தில் கட்டுப்பட்டு வாழும் மனிதனுக்கு வாழ்வில் சிக்கல்கள் பல தோன்றுவது இயல்பு. சிந்தனையாளர்கள், அறிஞர்கள், மெய்ஞ்ஞானிகள் இவர்களால் எழுதப் பெற்ற சொந்த வாழ்க்கை வரலாறுகள், வாழ்வின் சிக்கல்களை அவிழ்க்க வழிகாட்டிகளாக இருக்கின்றன. எந்த ஒரு பேரறிஞரும் அவர் குழந்தையாக இருந்த காலமுண்டு. கற்பனையில் மயங்கி வாழ்ந்த காலமுண்டு. கற்பனைக்கும் தெளிவிற்கும் இடையே, பழக்கத்திற்கும், விளக்கத்திற்கும் இடையே சிக்கித் தவித்த காலமுண்டு. அந்த அந்த அறிவு நிலைகளிலும் சிலர் சில கருத்துக்களை வெளியிட்டிருக்கலாம். அவர் அறிவிலே முழுமை பெற்றபின், அவரே வெளியிட்ட கருத்துக்கள் முன் வெளியிட்டக் கருத்துக்கு வேறுபட்டிருக்கலாம். இவையெல்லாம் வாழ்வின் இயல்பைக் காட்டுகின்றன. அவர் முன்னேற்றமடைந்த வழிகளைக் காட்டுகின்றன. எனது வரலாற்றிலும் வாழ்க்கைச் சிக்கல்கள் பல அமைந்துள்ளன. ஏற்றத்தாழ்வுகள், பெருமை, இழிவு, நன்மை, வன்மை எல்லாம் இருக்கும். என் வரலாற்றை நானே எழுதப் புகுந்ததால், அத்தனையும் இடம்பெறும். அன்பர்கள் மனம் தளராமல் சிந்தனையோடு படித்துப் பயன்பெற வேண்டும்.

எனது வயது பதினெட்டு வரையில்தான் நான் எனது பெற்றோரோடு இருந்தேன். அதற்குள் அவர்களைக் கேள்விகள் மூலமும், விளக்கங்கள் மூலமும் திணறச் செய்துவிட்டேன். வினா எழுப்புவேன் ஏதோ பதில் சொல்வார்கள். எனக்கு நிறைவு தந்தால் ஒப்புக் கொள்வேன். இல்லையேல் அது தவறானது என்று காரணத்தோடு எடுத்துக் காட்டுவேன். என் விளக்கத்தைக் கேட்டு அன்னையும் தந்தையும் பூரித்துப் போவார்கள். அவர்கள் ஏழ்மை நினைவு, வாழ்க்கைத் துன்பங்கள் எல்லாம் என் பேச்சுக்களாலேயே மறந்து போவதாகக் கூறுவார்கள். எனக்கு உணவு ஊட்டுவதற்காகச் சொல்லி வந்த கஜேந்திர மோட்சக் கதையில் களிப்புக் கவர்ச்சி கொண்டிருந்தேன். எனக்கு ஏழு வயதில் அதே கதையில் ஒரு சந்தேகம் பிறந்தது. கூடுவாஞ்சேரியில், பத்தாவது நாள் மரணச் சடங்கு ஒருவருக்கு நடந்தது. அதை மோட்ச தீபம் என்று சொன்னார்கள். மோட்சம் என்றால் என்ன என்று, என் அன்னையை வினவினேன். இறந்து விடுகிறார்களே அதைத்தான் மோட்சம் என்று சொல்லுகிறோம் என்று பதில் அளித்தார்கள். என் சிந்தனை விரைவாக ஓடியது. “அம்மா கஜேந்திர மோட்சத்தில் வரும் யானையும் செத்துத்தான் போனது” என்றேன். அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. முக்தி என்றால் என்ன வென்றேன். முக்தி மோட்சம் எல்லாம் ஒன்றுதான் என்றார்கள். அப்போது முதலைக்கு முக்தி, யானைக்கு மோட்சம் என்று நீங்கள் சொன்னவை, இரண்டுமே சண்டையிலே செத்துப்போய்விட்டன என்றுதானே விளங்குகின்றது? என்றேன். என் அன்னை கூர்ந்த அறிவு படைத்தவர். எனது மனநிலையைப் புரிந்து கொண்டார். “எனக்குப் பெரியவர்கள் சொன்ன கதையை அப்படியே உனக்குச் சொன்னேன் மற்றவை எனக்குத் தெரியாதப்பா” என்றார்கள். பிறகு எனது தந்தை வந்தார். நான் விடவில்லை. அப்பாவிடமும் இதே பேச்சு. அவரும் அன்னையைப் போன்றே பதில் அளித்தார். நானும் என் கருத்தையே எடுத்துச் சொன்னேன். என் தந்தைக்கு மகிழ்ச்சி பொங்கியது. அவரால் தாங்க முடியவில்லை. எனது அன்னையை நோக்கினார். “என்ன! இவன் நமக்கு ஒரு முருகனாகவே பிறந்திருக்கிறான்! பார்த்தாயா? குழந்தை வயதிலேயே பிரணவத்திற்கு அப்பனையே விளக்கம் கேட்டுப் பின் அவனே தந்தைக்குப் பிரணவ இரகசியத்தை விவரித்துக் கூறினான் முருகன். தந்தையையே முருகன் வியப்பில் ஆழ்த்தினான். அதுபோல்தான் இருக்கிறது இவன் நமக்கு விளக்கம் கூறுவது என்றார். இருவர் உள்ளங்களும் பெற்ற மகிழ்ச்சியினை, யானே அறிவேன். அப்போதை விட, 62 ஆண்டுகட்குப் பின் கூட, இப்போதும் அக்காட்சியை நினைந்து இன்புறுகிறேன்.

இந்த முறையில் பல கற்பனைக் கதைகளை ஏற்றுக் கொள்ள மறுத்தேன். என் மனோ நிலைமை தெரிந்த என் தந்தை ஒரு மாற்று வழி கண்டார். எனக்குச் சதகங்களைச் சொல்லிக் கொடுத்தார். படிக்கத் தெரியாத அவர், அறப்பளீசுர சதகம், தண்டலையார் சதகம், குமரேச சதகம் இவையெல்லாம் எப்படியோ மனப்பாடம் செய்து வைத்திருந்தார். முதலில் அவற்றைப் புத்தகமில்லாமலே சொல்லிக் கொடுத்தார். பிறகு எனக்கு எழுத்துக் கூட்டிப் படிக்கத் தெரிந்தபின், அச்சதகங்களை வாங்கிக் கொடுத்துப் படிக்கத் தெரிந்தபின், அச்சதகங்களை வாங்கிக் கொடுத்துப் படிக்கச் செய்தார். கொண்டாடும் பண்டிகைகளுக்கு விளக்கம் கேட்பேன். அவர்களுக்குத் தெரிந்த வரையில் சொல்வார்கள். சில சமயம் எனக்கு மனநிறைவு ஏற்படாது. ஆயினும் அவர்கள் பக்தி முறையில் தெய்வ வழிபாடு நடத்தும்போது மன உருக்கத்தோடு அவரகள் உடனிருந்து தெய்வ வணக்கம் செய்து வந்தேன். சிந்தனை, தொழில், “பிரைவேட் படிப்பு” இவ்வாறு என் காலம் ஓடியது. பதினெட்டாவது வயது முடிவில் சென்னை சென்றுவிட்டேன். அங்கு எனது அக்காள் வீட்டில் தங்கி இருந்தேன்.


என் மைத்துனர் எனக்காக வேலை தேடி அலைந்தார். சுமார் ஒரு மாத காலத்திற்குள் எனக்கு ஒரு வேலை கிடைத்தது. அக்காலத்தில் குதிரைப் பந்தயங்களுக்கு வெளியிலேயே அதற்கென அமைந்த கிளப்புகளில் பணம் கட்டும் முறை இருந்தது. அத்தகைய கிளப்புகள் இருந்தன. மவுண்ட் ரோட்டில் “ராயல் ரேஸிங் கிளப்” என்ற ஒரு நிறுவனத்தில் நான் அமர்ந்தேன். மாதச் சம்பளம் ரூபாய் ஐம்பது. வாரத்திற்கு இரண்டு ரேஸ்கள் நடக்கும். ஒன்று புதன் கிழமை, மற்றது சனிக்கிழமை. குதிரைப் பந்தய தினத்தின் முன் நாள், மாலை 3 மணிக்குப் போய் 7 மணி வரையில் வேலை செய்ய வேண்டும். பந்தய தினத்தில் காலை 8 மணி முதல் பகல் 2 மணி வரையில் வேலை. மறுநாள் காலை 8 மணி முதல் பகல் 1மணி வரையில் வேலை. வேலை செய்யும் தினங்களில் அரை நாட்களுக்கு ஒரு ரூபாயும், முழு நாட்களுக்கு ஒன்றரை ரூபாயும், சிற்றுண்டி அலவன்ஸ் என்று கொஞ்சம் காசும் கொடுத்தார்கள். அந்தக் காலத்தில் நான் படித்த படிப்பிற்கு மாதம் ரூ.75-க்கு குறையாமல் கிடைத்தது. அதிகம் எதிர்பாராத உயர்ந்த ஊதியம். எனது பெற்றோருக்கு ரூபாய் 10 செலவுக்குக் கொடுப்பேன். ரூபாய் 10 சீட்டுக் கட்டி வந்தேன். மிகுதியை அப்படியே எனது அக்காள் கணவரிடம் கொடுத்து விடுவேன்.

என் அறிவுக் கண்ணைத் திறந்த மகான்


இந்தச் சந்தர்ப்பத்தில்தான் எனக்கு ஒரு மகான், இல்லற ஞானி, ஆசானாகக் கிடைத்தார். என் பெற்றோர் செய்த தவப் பயன் என்றுதான் சொல்ல வேண்டும். அவர் பெயர் வைத்திய பூபதி எஸ். கிருஷ்ணாராவ். அவர் ஆயுர்வேதம், சித்த மருத்துவம், யூனானி மருத்துவம் மூன்றிலும் சிறந்த நிபுணர். தத்துவ ஞானத்தில் ஒரு மேதை. அறிவிலும் ஒழுக்கத்திலும் சிறந்த மகான். அவர் மந்தைவெளி பிராடீஸ் ரோடில், மருந்தகம் ஒன்று வைத்திருந்தார். அவர் முதலில் மயிலாப்பூர் நடுத் தெருவிலும், பிறகு ரொட்டிக்காரத் தெரு என்னும் தாச்சிமுத்து அருணாசலம் தெருவிலும் குடியிருந்தார். மாலை வேளைகளில் மாத்திரம் மந்தைவெளிக் கடைத்தெரு மருந்தகத்தில் இருப்பார். ஒருநாள் அவ்வழியே போய்க்கொண்டிருந்தேன். அவர் வேறு யாருடனோ தத்துவ ஞானத்தைப் பற்றி உரையாடிக் கொண்டிருந்தார். நான் கடை ஓரத்தில் நின்று கொண்டு கூர்மையாக அவர் பேசுவதைக் கவனித்துக் கொண்டிருந்தேன். அவர் என்னைப் பார்த்து “நீ யாரப்பா, இங்கு ஏன் நிற்கிறாய்” என்றார். “ஐயா, நான் கூடுவாஞ்சேரியில் இருந்தவன். இங்கு வைத்தியர் ஷண்முக முதலியார் வீட்டுக்கு வந்திருக்கிறேன். அவர் எனது அக்காள் கணவர். எனக்கு ரேஸ் கிளப்பில் வேலை” என்றேன். “உள்ளே வா அப்பா, உட்கார்” என்று கனிவோடு கூறினார். அந்த மொழி, என் பெற்றோரை நினைவூட்டியது. உட்சென்று உட்கார்ந்தேன். அவர்கள் பேச்சை முடித்து விட்டு, என்னை நோக்கி, “நீ விரும்பினால், உனக்கு ஓய்விருக்கும் போதெல்லாம் இங்கு வந்து கொண்டிரு அப்பா” என்றார். அப்படியே செய்வதாகக் கூறி வீடு சென்றேன். பிறகு வாரத்தில் நான்கு நாட்களிலும் அவரைச் சந்திப்பேன். எனது ஓய்வு நேரம் எல்லாம் அவர் மருந்தகங்களிலும் வீட்டிலும் இருந்து வந்தேன். பல இரவுகளில் அவருடன் தங்கியிருந்தேன். அப்போது அவருக்கு வயது 65. எனக்கு ஆயுர்வேத மருத்துவத்தை முறையாகச் சொல்லிக் கொடுத்தார். சித்த மருத்துவம் இடையிடையே இடம்பெறும். தத்துவ விளக்கம் நன்றாகப் போதித்தார். சரக சம்ஹிதை, சுச்ருத சம்ஹிதை, மாதவநிதானம், அஷ்டாங்கஹிருதயம் மொழி பெயர்த்துப் போதித்தார். புருவத்திடையே தியானம் செய்யும் யோக முறையையும் போதித்தார்.

இரண்டு ஆண்டுகளில் நான் மருத்துவத்தில் தேர்ந்த அறிவைப் பெற்றுவிட்டேன். தத்துவ அறிவிலும் தெளிவு பெற்றேன். தியானத்திலும் நல்ல பற்று உண்டாயிற்று. அவருக்கு என்னால் எந்த உதவியுமில்லை. ஆயினும் அவர் மகனைப் போல் என்னை ஏற்று, ஓர் சிறந்த மனிதனாக்கினார். அவரைப் போற்றுகிறேன். வணங்குகிறேன்.


இயற்கை நியதி
மேட்டினிலே கொட்டுநீர் பள்ளம் ஓடும்மேனோக்கி எறிந்த பொருள் நிலம்கவரும்நாட்டிவைத்த கம்பினிலோ மரத்திலோ போய்நட்புடனே கொடி வகைகள் சுற்றிக்கொள்ளும்சேட்டையாம் இளமையிலே ஆண்பெண் உள்ளம்சேர்ந்தொன்றி உடல் அணைய ஆர்வம் கொள்ளும்கூட்டுறவால் எப்பொருளும் தன்மை மாறும்குணங்களெல்லாம் இயற்கையிலே அமைந்ததாகும்.

பெண்ணின் பெருமை
பெண் வயிற்றி லுருவாகிப் பின்னு மந்தபெண் கொடுத்த பால் உண்டே வளர்ந்து; மேலும்பெண் துணையால் வாழுகின்ற பெருமை கண்டுபெண்மைக்கே பெருமதிப்பு தந்து உள்ளோம்பெண்ணினத்தை எங்கெவரும் எவ்விதத்தும்பெருமைகுன்ற அவமதித்தால் சகிக்க மாட்டோம்பெண்மைக்கு நமது கடன் ஆற்றவாரீர்பெருந்திரளாய் கூடி ஒரு முடிவு செய்வோம்.

வளமாக வாழ வழி வகுப்போம்
வாழவேண்டும் என்றெண்ணி உலக மீதுவந்ததில்லை எனினும் நாம் பிறந்துவிட்டோமவாழவேண்டும் உலகில் ஆயுள் மட்டும்வாழ்ந்தோர்கள் அனுபவத்தைத் தொடர்ந்து பற்றிவாழவென்ற உரிமை எல்லார்க்கும் உண்டுவாழ்வோர்க்கும் சாதகமாய் வாாழும் மட்டும்வாழ உள்ளோர் அனைவருமே ஒன்று கூடிவகுத்திடுவோம் ஒரு திட்டம் வளமாய் வாழ.

எனது வாழ்க்கை விளக்கம் - 4
வைத்யபூபதி எஸ். கிருஷ்ணாராவ் அவர்கள், எனக்குப் போதனை செய்த ஆயுர்வேத பாடங்கள், என் உள்ளத்தில் தெளிவாக இடம் பெற்றன. இதோடு என் அக்காள் கணவரும், ஆயுர்வேத சித்த மருந்துகளைக் கையாளும் ஒரு மருத்துவராக இருந்தார். நேர்முறையில் பலவகையான சூர்ணம், பஸ்பம், எண்ணை, லேகியம் இவற்றைச் செய்யும் திறனும் எனக்கு உணடாயிற்று. என் மருத்துவ திறமையில் மகிழ்ச்சி பெற்ற வைத்யபூபதி அவர்கள் என்னை ஒரு பட்டம் பெற்ற மருத்துவனாக்க வேண்டும் என்று விரும்பினார். அந்தக் காலத்தில் “அகில இந்திய ஆயுர்வேத மகா மண்டல் அண்டு வித்யாபீடம்” என்ற ஒரு நிறுவனத்தின் கிளை, சென்னையில் இருந்தது. அதன் தலைமை நிறுவனத்தில் இந்திய நாட்டு ஆயுர்வேத மருத்துவ மேதைகள் உறுப்பினர்களாக இருந்தனர்.
ஆங்காங்கு ஆயுர்வேதக் கல்லூரிகள் நடத்தியும், பரிட்சைகள் வைத்து வெற்றி பெறுவோர்க்கு நற்சான்றிதழ் வழங்கியும், வந்தனர். அந்த மருத்துவச் சான்றிதழுக்கு நல்லதோர் மதிப்பு அக்காலத்தில் இருந்தது. வடமொழியில் பரீட்சை எழுதுவோர்களுக்கு வைத்திய விசாரதா என்ற பட்டம் கிடைக்கும். அதே பரீட்சையை மற்ற எந்த மொழியில் எழுதினாலும் “வைத்திய பிஷக்” என்ற பட்டம் கிடைக்கும், தமிழ் நாட்டில் அந்தக் காலத்தில் கேப்டன் டாக்டர் சீனுவாசமூர்த்தி அவர்களும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களும், அகில இந்திய ஆயுர்வேத மகாமண்டலில் முக்கிய பொறுப்பேற்றிருந்தனர். என்னை எனது ஆசான் அந்தப் பரீட்சை எழுதும்படி தூண்டினார். அவ்வாறே எழுதினேன். மொத்தம் ஒன்பது பிரிவுகள். முதல் ஆண்டில் ஆறு பிரிவுகளை நல்ல மார்க்குகளுடன் பாஸ் செய்துவிட்டேன். மறு ஆண்டு நான் பரீட்சைக்குப் போகவில்லை. மூன்றாவது ஆண்டு பரீட்சை எழுதி விடுபட்ட மூன்று பிரிவுகளையும் பாஸ் செய்தேன். எனது வெற்றியைக் கண்டு, எனது அன்பு ஆசான் கொண்ட மகிழ்ச்சியை, என்னைத் தவிர வேறு யாராலும் புரிந்து கொண்டிருக்க முடியாுது. வளமாக வாழ ஒரு நல்லதோர் வழியை நாடி நிற்கும் ஒரு இளைஞனுக்கு, ஏற்றதோர் வழிகாட்டிவிட்ட நிறைவை, அவர் பேச்சிலும் பார்வையிலும் புன்முறுவலிலும் என்னால் காண முடிந்தது. நான்கு ஆண்டுகள் அதற்கென அமைந்த ஆயுர்வேதக் கல்லூரிகளில் படித்தவர்கள்தான் அந்தப் பரீட்சையில் தேற முடியும். அவ்வளவு பாடங்களும், நேர்முறைப் பயிற்சிகளும் உடையன.

இந்த இடைக்காலத்தில், குதிரைப் பந்தயத்தை ஒட்டி, ரேஸ் திடல் தவிர மற்ற இடங்களில் பணம் வாங்கக் கூடாது என்ற ஒரு சட்டம், நகர எல்லை வரையில் அமுலாகியது. டோல் கேட்டைத் தாண்டிச் சைதாப்பேட்டையில் பல ரேஸ் கிளப்புகள் நடத்தப் பெற்றன. அங்கும் நான் வேலை செய்து வந்தேன். மீண்டும் சில மாதங்களில் மாகாணம் முழுவதும், எல்லா இடங்களுக்கும் குதிரைப் பந்தயச் சூதாட்டத் தடைச் சட்டம் விரிவடைந்தது. எனக்கு அந்த வேலை அதோடு நின்று போயிற்று. எனக்கு வேலை தேடும் பொறுப்பு, என் அக்காள் கணவருக்கு மீண்டும் ஏற்பட்டு விட்டது. வயிற்றுப் புண்ணுக்காக ஒருவர் என் மாமாவிடம் மருந்து சாப்பிட்டு வந்தார். அவர் பெயர் நடேச ஐயர். அவர் போஸ்டல் ஆடிட் அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். அவரிடம் என் மாமா என் நிலையை விளக்கிச் சொன்னார். என்னை உற்று நோக்கிய அவருக்கு, எனக்கு ஏதேனும் நன்மைபுரிய வேண்டுமென அழுத்தமான ஓர் எண்ணம் உண்டாயிற்று. அதனை வெளிப்படையாகவே அவர் சொன்னார். அடுத்து வரும் ஞாயிற்றுக் கிழமை ஒரு இடத்திற்கு அழைத்துப் போய் வேலைக்குத் தக்க ஏற்பாடு செய்வதாகக் கூறினார். அதே போன்று அடுத்த ஞாயிற்றுக்கிழமை காலை, என்னை அவர் நண்பர் ஒருவர் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அவர் பெயர் இராஜகோபால் நாயுடு. எனக்குத் தக்கதோர் வேலை ஏற்பாடு செய்ய வேண்டுமென்று மிகவும் அக்கரையோடு நடேச ஐயர் அவர்கள் கூறினார்கள். என்னை மறுநாள் அவர் காரியாலயத்திற்கு அழைத்து வரும்படி கூறினார்.
மறுநாள் காலை 10-30 மணிக்கு, என்னை நடேச ஐயர் அவர்கள் அழைத்துக்கொண்டு, ஒரு காரியாலயத்தில் நுழைந்தார். அது மவுண்ட் ரோட்டை அடுத்த உட்ஸ் ரோடில் இருந்தது. எனக்கு ஒரே வியப்பு. அதற்கு முன் சென்ற இரண்டு ஆண்டுகளாகப் பலதடவை அந்த வழியே மவுண்ட்ரோடிலிருந்து மயிலாப்பூருக்குச் சென்றிருக்கிறேன். அங்கு நூற்றுக் கணக்கில் உத்யோகஸ்தர்கள் உட்ச்செல்வதையும், வெளிவருவதையும் பார்த்திருக்கிறேன். இந்த மாதிரி ஒரு காரியலாயத்தில் எனக்கு ஒரு வேலை கிடைத்தால், எவ்வளவு நன்றாய் இருக்கும் என்று நான் எண்ணியது உண்டு. இவ்வாறு பல தடவை எண்ணியிருக்கிறேன். எந்தக் காரியாலயத்தில் எனக்கு வேலை கிடைக்க வேண்டுமென எண்ணியிருந்தேனோ, அதே இடத்திற்கு என்னைக் கொண்டு சென்றதை நினைந்தே வியப்படைந்தேன்.

ஒரு மனு எழுதிக் கொடுத்தார் நடேச ஐயர். கையொப்பமிட்டேன். ரிக்கார்டு செக் ஷன் தலைவர் இராஜகோபால் நாயுடு, தலைமைக் குமாஸ்தாவிடம், ஏதோ சிறிது நேரம் பேசினார். மனுவில் சிபாரிசு எழுதிக் கையொப்பமிட்டுக் காரியாலயத் தலைவருக்கு (dy. Accountant General, posts & Telegraphs) அனுப்பி வைத்தார். பத்து நிமிடங்களில், ஒரு அட்டையில் கட்டி அனுப்பிய அந்த மனு, எனக்கு வேலை அளிப்பதை ஒப்புக்கொண்ட அடையாளக் கையெழுத்தோடு திரும்பி வந்தது. எனக்கு வேலை என்ன? சம்பளம் என்ன? என்றெல்லாம் எந்த விவரமும் தெரியாது. பகல் ஒரு மணிக்கு மேல் எனக்கு ஒரு வேலை கொடுத்தார்கள். வெளியிலிருந்து வரும் பதிவு செய்த கடிதங்களைத் திறக்க வேண்டும். பதிவு நெம்பர், அனுப்பியவர்கள் முகவரி கடிதத்தின் நெம்பர், தேதி இவற்றை அதற்கென வைத்திருந்த பதிவுப் புத்தகத்தில் எழுத வேண்டும். அன்று மாலை வரையில் இதையே செய்தேன். மணி ஐந்தாயிற்று. நடேச ஐயர் அவர்கள் செக் ஷனுக்கு வந்தார். என்னை அழைத்தக்கொண்டு மயிலாப்பூருக்கு என் மாமாவிடம் வந்தார்.
“நான் கோரியபடி குறிப்பிட்ட வேலை தம்பிக்கு கிடைக்கவில்லை. ஒரு கடைநிலை ஊழியர் வேலையே காலியிருந்தது. தற்காலத்தில் அந்த வேலையில் அமர்த்திக்கொண்டார்கள். அண்மையில் நாம் குறித்த வேலை காலியாகும் போது அதைத் தருவதாக உறுதியளித்தார்கள்” என்று எனது மாமாவிடம் நடேச ஐயர் அவர்கள் தெரிவித்தார். எனக்குச் சிறிது வருத்தமாகவே இருந்தது. சம்பளம் ரூ.15 தான். அவ்வேலை வேண்டாமென்று மறுத்தால், எனது மாமாவுக்கும் நடேச ஐயருக்கும் என் மீது வருத்தமுண்டாகும் என எண்ணினேன். அதை ஒப்புக்கொள்வதாகச் சம்மதம் தெரிவித்தேன். அன்று முதல் மிக்க பணிவோட காரியாலயத்தில் வேலை செய்தேன். அவர்கள் வாக்களித்தபடி, எனக்கு மேல் வேலை காலியானவுடன் கொடுத்து நல்ல முறையில் நடத்தினார்கள். அந்தக் காலத்தில் ரூ.23 தான் சம்பளமாக எனது வேலைக்குக் கிடைத்தது.
இந்தச் சம்பளம் போதவில்லை. சில நாட்கள் பற்றாக்குறையை, எவ்வாறு சரிபடுத்திக் கொள்வது என்றே சிந்தித்துக் கொண்டிருந்தேன். எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது. ஏன் நாம் நாள்தோறும் தறிவேலை செய்யக்கூடாது? அதன் மூலம் மாதம் பத்து ரூாபாய் சம்பாதிக்க முடியுமே என்ற எண்ணமே அது. அந்த எண்ணத்தைச் செயலில் கொண்டுவந்தேன். மாமா வீட்டிற்குச் சுமார் நான்கு பர்லாங்கு தூரத்தில், “துலுக்கச்சி தோட்டம்” என்ற ஒரு நெசவுப் பேட்டை இருந்தது. அதற்கு இப்போது பெயர் மாற்றி வைத்திருக்கிறார்கள். அங்கு சென்று கூலிக்கு ஒரு தறி அமர்த்திக்கொண்டேன். அங்கும் ஒரு குழப்பம். ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் நெய்பவருக்குத் தறி கொடுத்தால், எங்களுக்கு வாடகை கட்டாது. மாதம் தறி ஒன்றுக்கு வாடகை ஒரு ரூபாய் ஆகிறது, என்று தறிசொந்தக்காரர் கூறினார். அந்த வாடகையை நான் கொடுத்துவிடுவதாக ஒப்புக்கொண்டு, தறியை அமர்த்திக் கொண்டேன். எனக்குத் தறி கொடுத்து உதவிய மாஸ்டர் வீவர் திரு. தங்கவேலு முதலியார் அவர்கள். அவர் ஒரு தீவிரமான திராவிடக் கழக அன்பர். வேலை, கூலி, தவிர, மற்ற அரசியல் சமூக நிலைமைகளைப் பற்றி நாம் ஒன்றுமே அவரிடம் பேசிக்கொள்வது கிடையாது. ஆன்மீகத் துறையில் ஆழ்ந்த நான் அதை அடியோடு வெறுக்கும் ஒரு அன்பரிடத்தில் இவ்வாறு இரண்டாண்டுகள் தொடர்ந்து சிறு பிணக்குமின்றி வேலை செய்துவந்தேன். காலை 6 மணி முதல் 9 மணி வரையில் தறி நெசவு, பின்னர் குளியல், சாப்பாடு எல்லாம், பதினோரு மணிக்குள் காரியாலயம். மீண்டும் மாலை 6.30 மணி முதல் 8 மணி வரையில் விளக்கு வைத்துத் தறி நெசவு நெய்வது, இவ்வாறு மாதம் ரூபாய் பத்து சம்பாதித்து, செலவுக்கு வேண்டிய பொருள் ஈட்டி வந்தேன். அதன் பிறகு ஒரு திண்ணைப் பள்ளிக் கூடத்தில் ஆசிரியர் வேலை கிடைத்தது. காலையில் மாத்திரம் வேலை. ரூபாய் ஏழு சம்பளம். உடல் உழைப்பு ஓரளவு குறைந்தது.

எனது வாழ்க்கை விளக்கம் - 4

எனது வயது இருபத்திரண்டு ஆயிற்று. அப்போது ஒரு மறக்கமுடியாத சம்பவம் நிகழ்ந்தது. என் அக்காள் வீட்டுக்கு எதிர் வீட்டில் பத்தாவது படித்து வந்த மாணவன் பெயர் நாராயணசாமி. அவன் எனக்கு உயிர்த்தோழனாக இருந்தான். பி.எஸ். உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்தான். மாலை வேளைகளில் நாங்கள் மற்றும் சில மாணவர்களோடு கடற்கரைக்குச் செல்வோம். மந்தைவெளியிலிருந்து நான்கு பர்லாங்கு தூாரம் தான் கடற்கரை. வெயிற்காலத்தில் நாள்தோறும் கடலில் இறங்கிக் குளித்துவிட்டு மலை ஏழு மணிக்குள் வீட்டுக்கு வருவோம். குறிப்பிட்ட நாள் நானும் நாராயணசாமியும் மாத்திரம், கடலில் இறங்கிக் குளித்தோம். மற்ற மாணவர்கள் கரையில் உட்கார்ந்திருந்தனர். சுமார் பதினைந்து நிமிடங்கள் சென்றன. நாராயணா போதும் வா என்று அவனை அழைத்தேன். அன்று அலைகள் உயரமாக எழும்பி வந்தன. ஒவ்வொரு அலையும் ஒரு ஆள் உயரத்தில் எங்களைத் தூக்கிப்பின் தாழ்த்தியது இயற்கை ஊஞ்சல்போல் இருந்தது. மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியூட்டியது. நான் கூப்பிட்டபோது அருகே ஒரு அலை உயரமாக வந்தது. அதைப் பார்த்து “This is the last wave. We will enjoy it. இதுதான் கடைசி அலை, இதை ரசித்து விட்டுச் செல்லலாம்” என்றான். அதற்குள் அந்தப் பேரலை எங்கள் இருவரையும் மிகவும் உயரத்தில் தூக்கிவிட்டது. மீண்டும் அவ்வலை தனியும்போது நாங்கள் சில கெஜ தூரம் கடலுக்குள் சென்று விட்டோம். காலில் தரை தட்டவில்லை. மிதந்து நீந்தினோம். ஒன்றும் முடியவில்லை. ஏதோ ஒரு வலியாக நாம் ஒரு பத்தடி தூரம் கரைப் பக்கம் வந்தேன். காலில் தரை தட்டியது. எனினும் ஏதோ ஒரு சுழல் இருப்பதாக உணர்ந்தேன். சமாளித்துக்கொண்டு விரைவாகக் கரையேறி விட்டேன். நாராயணசாமி தவித்துக் கொண்டிருக்கிறான். நான் நண்பர்களிடம் நாராயணன் இருக்கும் நெருக்கடி நிலையைக் கூறி, உடனே மீனவர் யாரையேனும் அழைத்து வரும்படி சொல்லி விட்டு, கரையில் வைத்திருந்த எனது துணியையும் நாராயணன் துணியையும் முடிபோட்டு நீளக்கயிறு போலாக்கிக்கொண்டு, மீண்டும் கடலில் இறங்கினேன். என்னால் நிலைத்து நிற்க முடிந்த ஆழம் வரையில் சென்று, துணியை வீசினேன். ஒரு பத்தடி தூரமே எட்டவில்ல. அவன் கைகளால் துணியைப் பிடிக்க முயன்றான். நான் மேலும் சில அடி தூரம் கடலுக்குள் சென்றேன். என்ன சோதனை? மீண்டும் நான் அதை சுழலில் சிக்கிக் கொண்டேன். முழுமுயற்சியோடு நீந்தினேன். ஒரு நிமிட நேரத்தில் கால் தரையைத் தொடும் இடத்திற்கு வந்துவிட்டேன். திரும்பி நாராயணனைப் பார்த்தேன். அப்படியே முழுகி விட்டான். அவன் கை ஐந்து விரல்கள் மட்டும் சிறிது நேரம் மேலே தெரிந்தது. பிறகு அந்தக் கையும் தெரியவில்லை. எனக்குத் தாங்கொணாத் துயரம். என் அருமை நண்பன், உயிர்த்தோழன் வேலை நேரம் போக மற்ற நேரத்தை என்னோடு கழித்து வந்த தோழன் கடலில் முழுகிவிட்டான். நான் மாத்திரம் வாழ வேண்டுமா? ஏன் அவனோடு மூழ்கி விட்டால் என்ன? என்ற துடிப்பு எழுந்தது. “ஐயோ நாராயணா! என்னை விட்டுப் பிரிந்து விட்டாயே?” என்று, உரக்க கூவினேன். உடனே என் அன்னை நினைவும் தந்தையார் நினைவும் வந்தது. கடல் ஆழம் பாய வேண்டுமென்ற விரைவு குறைந்தது. அழுது கொண்டே திரும்பிப் பார்த்தேன். அதற்குள் மீனவர் இருவரை அழைத்துக் கொண்டு நண்பர்கள் வந்தனர். நான் அவன் மூழ்கிய இடத்தைக் குறிப்பிட்டுக் காட்டினேன். மீனவர்கள் மூழ்கித் தேடினார்கள். ஆள் கிடைக்கவில்லை. ஒரு மணி நேரம் சென்றது. மாலை 7.30-க்கு வீடு திரும்பினோம். வழியிலே சென்று போலீசில் புகார் கொடுத்துவிட்டு, நாராயணன் துணிகளை அவர்கள் வீட்டில் கொடுத்து, நாங்கள் எல்லோரும் தாங்கொணாத் துயரத்தோடு நடந்ததைச் சொன்னோம், நாராயணனின் அருமை அக்காள் கதறிய கதறல், இன்றைக்கு நினைத்தாலும் எனது உள்ளத்தை உருக்கிறது. ஐந்து மணிக்குக் கடற்கரைக்குச் சென்றவன், 7.30-க்கு இறந்துவிட்டான் என்ற செய்தி வந்தால், உடன் பிறந்தவளுக்கு எப்படி இருக்கும். மறுநாள் சென்னைத் துறைமுகம் அருகே அவன் உடல் கண்டு பிடிக்கப் பெற்றது.
எனது வாழ்க்கையில் இது ஒரு மறக்க முடியாத சோக நிகழ்ச்சி, நண்பனை இழந்த வருத்தம் என்னை நீண்ட நாட்கள் வாட்டியது. அவ்வப்போது என்னை நானே தேற்றிக்கொள்வேன். அவன் வாழ்க்கைத் துயரங்கள் எல்லாவற்றையும் தாண்டிச் சென்று விட்டான். அதிலிருந்து வருந்திக் கொண்டிருக்கும் நான், அவனைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்? எனக்கும் ஒருநாள் அத்தகைய பேறு கிட்டத்தானே போகிறது. இந்தச் சிந்தனையில் என்னை தேற்றிக் கொண்டு மற்ற கடமைகளைச் செய்யத் தொடர்ந்தேன்.


மூன்றுவித வறுமை
பண்டங்கள் உடல் வெப்ப தட்பம் காக்கபசிதீர்க்க அவசியமே மனிதர்கட்குபண்டங்கள் இல்லாமை வறுமை மேலும்பலபண்டம் அனுபவித்தும்; பழக்கத்தாலேபண்டங்கள் தேவை மிகுந்ததனால் பாரில்பலர் வறுமைக் குள்ளானார், அறிவின் தாழ்வால்பண்டங்கள் தமை அளவுமுறை யில்லாமல்பதுக்குவதால் வேறு வறுமை கண்டோம்.

ஒழுக்கம் அறம் நீதி
இயற்கை துன்பங்கள் எனும் வெப்ப தட்பஏற்றங்கள் பசி உடலின் கழிவு உந்தல்முயற்சியால் காலா காலத்தில் தீர்க்கமுடையற்ற வாற்ப்புதான் சுதந்திரம் ஆம்.செயற்கையில் ஒருவர் பிறர் சுதந்திரத்தைசீர்குலையச் செய்யாத முறையில் வாழும்பயிற்சியும் நல்நடத்தையும் ஒன்றிணைந்தபண்பாடே ஒழுக்கம், அறம் நீதியாகும்.

நோன்பு
பிறர் செயலில் வாழ்க்கையினில் குறுக்கிட்டேதன்பெருமையினைத் தன்முனைப்பை வளர்க்க வேண்டாம்பிறர் ஏழ்மை எளிமையிலே வாழ்ந்தபோதும்பேராற்றல் மனஅலைக்கு உண்டுஉண்டுபிறரஉள்ளம் வருத்தச் செய்துலகில் வாழும்பேதைமனம் பெற்றவர்க்கு அமைதி கிட்டாபிறர்மகிழத் தான்மகிழ்ந்து சலிப்பில்லாதபேரின்ப வாழ்வடையும் நோன்பை ஏற்போம்.

என் வயது இருபத்திரண்டுக்குப் பிறகு, எனது வாழ்வில் பல திருப்பங்கள் ஏற்ப்பட்டன. பொருளாதாரத் துறையில் உயர வேண்டுமென்ற ஆர்வம் ஒருபுறம், தத்துவத்துறையில் உயிரின் நிலை என்ன? தெய்வம் எவ்வாறு உளது? என்று அறிந்துவிட வேண்டுமென்ற ஆர்வம் ஒருபுறம், என் அறிவை ஆட்க்கொண்டன. எப்போதுமே சிந்தனைதான். முயற்சிதான் பொருள் துறையை உயர்த்துமென்பதில் அசைவற்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. ஆராய்ந்து கொண்டேயிருந்தால், கடவுளையும் கண்டுவிடலாம் என்ற ஒரு திண்ணமான எண்ணமும் எனக்கிருந்தது.
போஸ்டல் ஆடிட் ஆபிஸில் கிடைத்த வேலை எனக்குச் சிறிதுகூடச் சம்மதமில்லை. எனினும் அந்த வேலையையும் விட்டு விட்டு என்ன செய்வது? வேறு வேலை கிடைத்தால் பின்னர் அதைப் பற்றி முடிவு செய்யலாம் என்று தொடர்ந்து வேலை செய்து வந்தேன். ரூாபாய் பதினைந்து என் வேலைக்குச் சம்பளம். தறி நெசவில் மாதம் சுமார் பத்து ரூாபாய் கிடைக்கும். மொத்தம் கூட்டினால் ரூாபாய் இருபத்தைந்து, அந்தக் காலத்தில் என் தேவைக்குப் போதும். என் உணவுக்கும், பெற்றோர்களுக்குப் பணம் அனுப்புவதற்கும், அத்தொகை போதுமானதாக இருந்தது. எனினும் எதிர்கால முன்னேற்றம் எப்படி? மேலும் காலையிலும் மாலையிலும் நான்கு பர்லாங்கு தூரம் சென்று, தறி நெய்துவிட்டு வருவதென்பது, எனக்குத் தாங்கொணாத் துன்பமாக இருந்தது. முதலில் தறி நெசவிற்கு ஒரு முடிவு கட்டிவிட வேண்டும். இந்த நினைவில் மிக அழுத்தமாக இருந்தபோது, ஒரு திண்ணைப் பள்ளிக்கூடத்தில் எனக்குப் பகுதி நேெர வேலை கிடைத்தது. இரத்தினம் என்னும் பெயருடைய ஒருவர், அந்தப் பள்ளிக்கூடத்தை நடத்தி வந்தார். என்னிடம் மிகவும் கண்ணியமாகவும் அன்பாகவும் நடந்து கொண்டார். நான் ஆங்கிலம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியன். காலையில் இரண்டு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூபாய் பத்து, நெசவுத் தொழிலைவிட சிறிது சுலமாக இருந்தது. எனினும், முன்னேற்றம் எவ்வாறு?
எனது பொருள் துறை வளர்ச்சியைப் பற்றி, ஒருநாள் ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தபோது, ஒரு எண்ணம் தோன்றியது. “ஆயுர்வேத மருந்துகள் எல்லாம் தெரிந்திருக்கும் நான், ஏன் மருத்துவம் செய்யக் கூடாது?” இந்தத் துறை எனக்கு எதிர்காலத்தில் வளர்ச்சி தரும் என்று நினைத்தேன். முதலில் எவ்வாறு தொடங்குவது? என்ற சிந்தனை. கடைசியாக ஒரு முடிவிற்கு வந்தேன். பல் பொடியும், தாம்பூல மாத்திரையையும் செய்து விற்பது என்று முடிவு செய்தேன். அப்படியே தாம்பூல மாத்திரையைத் தயார் செய்தேன். அதில் கஸ்தூரி, கோரோசனம், குங்குமப்பூ, இவையெல்லாம் இருக்கும். ஒரு உயர்ந்த முறை அது. எனது ஆசான் வைத்யபூபதி எஸ். கிருஷ்ணாராவ் செய்முறை அது. ஒரு புட்டி நூறு மாத்திரைகள் விலை நாலு அணா. போஸ்டல் ஆடிட் ஆபிசிலேயே, அதை விற்கத் தொடங்கினேன். சிறுகச் சிறுக விற்பனை அதிகமாயிற்று. ஒரு முறை செய்தால் ரூபாய் பத்து செலவாகும். வரவு ரூபாய் நாற்பது. ஒரு மாதத்தில் விற்றுவிடும். இதோடு பல்பொடியும் செய்தேன். “சிகாமணி நாயுருவி பல்பொடி” என்பது அதன் பெயர். இரண்டு விற்பனைகளும் சேர்ந்து, மாதம் ஐம்பது வருவாய் அளித்தது. எனது நம்பிக்கை வலுப்பெற்றது. பொருள் துறையில் எப்படியும் முன்னேறிவிடுவேன் என்ற ஒரு எண்ணமும் உறுதியும் எனக்கு உண்டாகிவிட்டன.
இருபத்துமூன்றில் எனக்குத் திருமணம் செய்து வைக்க, என் பெற்றோர்கள் முனைந்தனர். எனது அக்காள் மகளையே எனக்குத் திருமணம் செய்து வைக்கும்படி, என் மாமாவை என் தந்தையார் கேட்டார். எனது மாமாவுக்குத் தனது மகளை ஒரு செல்வ வளமிக்க ஒருவனுக்குக் கொடுக்க வேண்டுமென்ற விருப்பம். எனக்கு என் அக்காள் மகளையே மணக்க வேண்டுமென்ற விருப்பம். என் மாமாவின் முடிவு கண்டு என் பெற்றோர்கள் மிகவும் வருந்தினார்கள். எனக்கு வேறு இடத்தில் பெண் பார்க்கலாமா என்று, என்னை வினவினார்கள். குழந்தை வயது முதலே என்னோடு பழகி என் உள்ளத்தில் நீங்கா நினைவு பெற்றபின், வயது வந்த பிறகும் அவளையே மணக்க வேண்டுமென்ற ஆர்வத்தில் இருந்த எனக்கு, வேறு எந்தப் பெண்ணையும் மணக்க விருப்பமில்லை. திருமணப் பேச்சு நின்று விட்டது.
சுமார் ஆறு மாதங்கள் சென்று விட்டன, இந்தச் சமயத்தில் எனக்கு ஒரு பேரிடி. என் தந்தைக்கு காய்ச்சல் கண்டு மிகவும் அபாய நிலையில் இருப்பதாகச் செய்தி வந்தது. மறுநாள் விடுமுறை எடுத்துக் கொண்டு கூடுவாஞ்சேரிக்குப் போய் என் தந்தைக்கு வேண்டிய கடமைகளைச் செய்யலாம் என்று இருந்தேன். மறுநாள் காலையே, என் தந்தை இயற்கை எய்திவிட்டார் என்ற செய்தி கிடைத்தது. என்னால் இந்த அதிர்ச்சியைத் தாங்க முடியவில்லை. செய்தியைக் கேட்ட இடத்திலேயே, அப்பா என்று கூவிக் கதறிக் கதறி அழுதேன். எதிர் வீட்டில் ஒரு பெரியவர் இருந்தார். என்மீது பரிதாபம் கொண்ட அவர், என்னை அவர் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். அவர் மனைவியும் அவரும் என்னைத் தேற்றினார்கள். அவரைப் பார்த்து என் அப்பாவை நான் இழந்துவிட்டேனே என்று மீண்டும் ஒரு முறைக் கதறினேன். “அப்பா! வேதாத்திரி, கவலைப்படாதேடா! உனக்கு நான் தந்தையாக இருந்து ஆகவேண்டிய அனைத்தும் செய்கிறேன். எனக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களோடு நீ மூன்றாவது பிள்ளையாக இரு அப்பா” என்று உள்ளக் குழைவோடு ஆறுதல் கூறினார்கள்.
பிறகு ஊருக்குச் சென்று என் தந்தைக்கு இறுதிக் கடன் ஆற்றினேன். பிரிவாற்றாமை என்ற அனுபவம், எனக்கு அது தான் முதல் தடவை. மீண்டும் மயிலாப்பூருக்கு வந்து எனது கடமைகளை ஆற்றத் தொடங்கினேன். தாம்பூல மாத்திரை, பல்பொடி விற்பனை எனக்குப் போதிய பணம் அளித்ததால் திண்ணைப் பள்ளிக்கூட ஆசிரியர் வேலையை விட்டு விட்டேன்.
எனது அக்காள் வீட்டு பக்கத்து வீட்டில் சொக்கலிங்க கிராமணி என்பவர் ஒருவர் இருந்தார். அவர் ஒருநாள் என்னை அழைத்து தனது இரண்டு மகன்களுக்கும் பிரைவேட் பாடம் சொல்லிக் கொடுக்கும்படியும் மாதம் ரூபாய் ஏழு தருவதாகவும் கூறினார். சிறிது தயங்கிப் பின் ஒத்துக் கொண்டேன். இரண்டு மாதங்கள் சென்றன. ஒருநாள் அவர் என்னை நோக்கி “ஏன் திருமணம் செய்துகொள்ளத் தாமதம்” என்று வினவினார். “எனக்கு போதிய பணம் இல்லை” என்று பதிலளித்தேன். நான் ஒரு சீட்டுக் கட்டி வந்தேன். ரூபாய் நூறுதான் அதன் மூலம் கிடைக்கும். திருமணத்திற்கு என் திட்டப்படி ரூாபாய் இருநூறு வேண்டும், இந்த நிலைமைகளை விளக்கிச் சொன்னேன். வட்டி இல்லாமல் நூறு எனக்கு கடனாகக் கொடுப்பதாகவும் உடனே திருமண ஏற்பாடு செய்யும் படியும் ஊக்கமளித்தார்.
இந்தப் பேச்சுக்கள் அனைத்தையும் எதிர் வீட்டு அப்பாவிடம் சொன்னேன். உடனே அவரும் அவர் மனைவியும் வந்து, என் மாமாவைப் பெண் கேட்டார்கள். உடனே பதில் தரவில்லை. அவர்களும் விடவில்லை. எப்படியோ ஒருவாறு நான் விரும்பியவளையே எனக்கு மணம் செய்ய முடிவு செய்து விட்டார்கள், பணமும் தயார் செய்துவிட்டேன்.




No Responses to "எனது வாழ்க்கை வரலாறு - வேதாத்திரி (3)"