வாழ்க வளமுடன்

பொருள், புகழ், செல்வாக்கு, புலனின்பம் என்பனவற்றில் பேராசை கொண்டு, கற்பனையால் சில வரவுகளை எதிர்பார்ப்பார்கள் அல்லது பிறரிடம் இருந்து கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். செயலுக்குத் தக்க விளைவு என்பது இறையாற்றலின் திருவிளையாடலாக இருக்கிறது. இந்த உண்மையறியாமல் செயலின்றிக் கற்பனையால் ஒரு விளைவை எதிர்பார்ப்பதும், கடமைக்கும் உறவுக்கும் பொருந்தாமல் பிறரிடமிருந்து ஒன்றை எதிர்பார்ப்பதோ அல்லது ஆசையின் பெருக்கத்தால் அளவுக்கதிகமாக எதிர்பார்ப்பதோ வெற்றியடைவதில்லை. இது இயற்கை நியதி. சிந்தனையின்றி இயற்கையின் நியதிப்படி அமைந்த விளைவுகளை ஏற்றுக் கொள்ளாமல் எதிர்பார்த்த ஆசையையும் அப்படியே வைத்துக் கொண்டு, ஏமாற்றத்தையும் ஒப்புக் கொள்ளாமல், ஏற்படும் மனப்பிணக்கு தான் கவலை. இங்கு கடமைகளை ஒட்டி, செயல்களையொட்டித் திட்டமிட்ட விளைவுகளை எதிர்பார்ப்பது தவறாகாது. இது கடமையைச் சார்ந்ததாகும்.

கற்பனை எதிர்ப்பார்ப்பும் நீதியான தோல்வியும் பற்றியே இங்கு சிந்திக்கிறோம். தோல்வி தான் இயற்கை நீதியென்று ஒப்புக் கொண்டால் தனது தவறு என்ற கற்பனை எதிர்பார்ப்புக் கலைந்து போகும். இந்த இரண்டையுமே ஒன்றோடு மற்றொன்றைச் சேர்க்காமல் வைத்துக் கொண்டு இரு நினைவுகளுக்கு மத்தியிலே மனதை வைத்துக் கொண்டு வருந்துவது தான் கவலை. எனவே, ஒருவர்படும் கவலையும் உள் ஒன்றிருக்கப்புறம் ஒன்று நினைக்கும் பொருந்தா மன நிலையே. இந்நிலையும் அறிவின் வளர்ச்சியைத் தடுக்கும்.

அறிவின் வளர்ச்சியுடைய உயிர்தான் ஆக்க வாழ்வு பெற முடியும். அறிவின் மதிப்புக் குறையாமல் உயிர் போனாலும் சரி அதை ஏற்றுக் கொள்வோம். அறிவு கெட்டு உயிர் நீடித்துப் பயனில்லையென்பது அறிஞர் கண்ட தெளிவு.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

No Responses to "கவலை ஏன்?"