வாழ்க வளமுடன்

தூலம், சூக்குமம், காரணம் என்ற மூன்று சொற்களைக் கேட்டிருப்பீர்கள். இவற்றுள் தூலமாகியது உடல், சூக்குமமாகியது உயிர், காரணம் என்பது பிரம்மம் அல்லது மெய்ப்பொருள். இந்த உடலுக்கு மையப்புள்ளி, சுற்று வட்டம் இரண்டும் உண்டு. அதாவது உடலுக்கு எல்லை உண்டு. உயிருக்கும் மையப்புள்ளி உண்டு; ஆனால் அதனுடைய சுற்றுவட்டம் ஒரு எல்லைக்குள் அடங்காது. மெய்ப் பொருளுக்கோ மையப்பள்ளியும் இல்லை, சுற்று வட்டமும் இல்லை. அந்த உயிருக்கு மனமானது விரியும் போது அது பிரம்மம் வரையில் போவதனால் சுற்றுவட்டம் இல்லை.

ஆனால், பிரம்ம நிலைக்கு மையப்புள்ளியும் இல்லை, சுற்று வட்டமும் இல்லை. இங்கு பிரம்மமே அறிவாக இருப்பதனால் அந்த பிரம்மம் என்ற நிலையிலே முற்றறிவு (Total Consciousness). அது உயிராக வந்ததனால் இயங்கிப் பெற்ற சுற்றறிவு (Character) இதுவரையில் இயங்கிப்பெற்ற பதிவுகள் அனைத்தையும் அடக்கமாகக் கொண்டது. அதற்கும் மேலே இந்த உடல் வரையில் நின்று புலன்கள் மூலமாக இயங்கிக் கொண்டிருக்கும் போது அது பற்றறிவு.

இவ்வாறாகத் தானே பற்றறிவு, கற்றறிவு, முற்றறிவு என்று மூன்றாகச் சொல்லலாம். இந்த மூன்று நிலையிலும் எங்கேயும் இருப்பது அறிவு ஒன்றுதான்; இருக்கும் நிலைக்குத் தகுந்தவாறு, அதனுடைய தன்மைக்குத் தகுந்தவாறு வேறுபடுகின்றது. தெளிவினாலே, தவத்தினாலே, பல பிறவிகள் எடுத்த தொடர்பினாலே அவர்களுடைய Character இந்த மூன்று நிலையிலே எங்கே வேண்டுமானாலும் நிற்கலாம். ஆனால், விகிதாச்சாரம் என்ன? அந்தந்த இடத்தில் ஏற்பட்ட பதிவு அழுத்தம், வலுவு எந்த விகிதாச்சாரத்தில் இருக்கிறதோ அந்த அளவு அதிகமாக இருக்கும்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

No Responses to "பற்றறிவு, கற்றறிவு,"