வாழ்க வளமுடன்

நாம் நமது வாழ்வைச் சிக்கலில்லாமல் இனிமையாக அமைத்துக் கொள்ள வேண்டுமானால் உடலை நலமுடன் வைத்துக் கொள்ளவும் மனதைத் தெளிவாக வைத்துக் கொள்ளவும் வேண்டும். மனக்களங்கங்கள் அனைத்தும் தன் முனைப்பிலிருந்து தான் உண்டாகின்றன. பேரியக்க மண்டல விரிவாக அமைந்து இயங்கும் அருட்பேராற்றலால் ஒவ்வொரு தோற்றமும் வளர்ச்சியும், நீடிப்பும், முடிவும் நடைபெறுகின்றன. மனிதனும் அவ்வாறே!

பெற்றவர்கள், தாய் தந்தையர் சமுதாயத்தின் எண்ணிறந்த மக்களுடைய உழைப்பால் விளைந்த பொருட்களைக் கொண்டே ஒருவன் வளர்கிறான், வாழ்கிறான். கல்வி, தொழில், செல்வாக்கு இவற்றைச் சமுதாயம் அளிக்கின்றது. எனவே, தனி மனிதன் எதைக் கொண்டு தன் முனைப்புக் கொள்வது? இவ்வுண்மையினை உணர்வதோடு, மறவாமல் நினைவுகொள்வதால் தன்முனைப்பு என்ற மயக்கப் புகையில் சிக்காமல் மனிதன் தன்னைக் காத்துக் கொள்ள முடியும். தன்முனைப்புத் திரை நீங்கினால் அறுகுணங்களும் பொறாமை, கடும்சொல், பகைமை இவையும் எழ இடமில்லை.

இந்த மனோநிலையில் தான் மனிதனின் மனம் தூய்மையாக இருக்க முடியும். இத்தகைய உண்மை விளக்கம் பெறவும் அந்த விளக்கத்தின் ஒளியில் வாழ்வைச் சீரமைத்துக் கொண்டு உடல் நலத்துடனும், பொருள் வளத்துடனும் சிறப்பாக வாழவும் வழி செய்வது குண்டலினி யோக முறை. இந்தப் பெருமை வாய்ந்த யோகத்தின் நான்கு கூறுகளாகிய தவம், தற்சோதனை, குணச்சீரமைப்பு, அறிவின் முழுமைப்பேறு இவற்றைச் செம்மையாகப் பயின்று சிறப்பாக வாழும் நீங்கள் எல்லோரும் இந்தச் செந்நெறியின் பெருமையை உங்கள் அறவாழ்வின் மூலம் உலகுக்கு உணர்த்துங்கள். எல்லா வளமும் ஓங்கிய உலகுக்கு உள்ள ஒரு குறைபாடு ஆன்மீக விளக்கம் இன்மை. இதனை முழுமை செய்து மனித குலத்துக்குத் தொண்டாற்ற நீங்கள் ஒவ்வொருவரும் முனைந்து நில்லுங்கள்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

No Responses to "தொண்டாற்ற முனைந்து நில"