வாழ்க வளமுடன்

தவத்தையும் அறத்தையும் நீங்கள் மிகச் சுலபமாகப் பற்றிச் செல்லும் முறையினை இப்போது உங்களுக்குச் சொல்லுகின்றேன். தவம் எதற்காக என்றால் இறையுணர்வு பெற்று இறைவனோடு உறைவதற்காக. அறம் எதற்காக என்றால் இதுவரையில் செய்த கர்மங்களின் அழுத்தத்தினால் எண்ணமும் செயலும் தோன்றிக் கொண்டே இருக்கின்றனவே, அதிலிருந்து செய்து செய்து நல்லனவே செய்யக்கூடிய அளவுக்குத் தீயன செய்யாது இருக்கக் கூடிய ஒரு தூய்மைக்கு வரவேண்டும்.

மனத் தூய்மை தவத்தினால் வரும்; வினைத்தூய்மை செயலினால் வரும்; நல்ல செயல் அறத்தினால் வரும். அதனால் இது வேண்டும். இந்த இரண்டையும் ஒருங்கே பார்ப்பதற்கு என்ன வேண்டும்? இந்தக் காலத்திற்கு வேண்டியது அதுதான். அந்த அறம், தவம் இவற்றை வைத்துத் தான் இதுவரையில் இந்த உலகத்திலே ஏற்பட்ட மதங்களெல்லாம் அமைந்துள்ளன.

எந்த மதத்தை எடுத்துக் கொண்டாலும் இறை-உணர்வைக்காட்டி அற-உணர்வை காட்டிடுவதாகவே இருக்கும். இந்த இரண்டும் தான் எல்லா மதங்களிலும் உள்ளன. இறை உணர்வுக்கு இறைவழிபாடு. உலக மக்களோடு தொடர்பு கொண்டு இனிமையாக - அதாவது ஆங்கிலத்தில் "harmony" என்று சொல்கின்றோமோ அவ்வாறு - வாழ்வதற்கு என்ன வேண்டும்? ஒழுக்கம், கடமை, ஈகை என்ற அறம் வேண்டும். இந்த அறநெறி உலக வாழ்க்கைக்கு அவசியம்.

தவநெறி, உளப்பயிற்சி, அறிவு மேன்மை இறைவனை அடைய இவை வேண்டும். இதுவரையில் மதங்களிளெல்லாம் அந்த உணர்வை ஏற்படுத்துவதற்காக இதெல்லாம் சொன்னார்கள். இப்பொழுது அதை விட இன்னும் இந்த விஞ்ஞான யுகத்திலே மிகவும் சுருக்கமாகத் தெரிய வேண்டுமானால் என்ன - அந்தச் செயலிலேயே சிவனைக் காணலாம்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

No Responses to "தவமும் அறமும்"