வாழ்க வளமுடன்

நமக்கு அப்பால் ஒரு சக்தி இருக்கிறது. அது தான் இயற்கை என்று அனைவரும் ஒத்துக் கொள்வார்கள். அதற்கு மதவாதிகள் கடவுள் என்று பெயர் வைத்துள்ளார்கள். அதேபோல் இந்தப் பிரபஞ்சத்தை எடுத்துக் கொண்டால், இந்த உலகம் ஒரு நாளைக்கு 25 ஆயிரம் மைல் தன்னைத் தானே ஒரு சுற்றுச் சுற்றி வருகிறது. சூரியனைச் சுற்றி வரும் பாதையிலே ஒரு நாளைக்குப் பதினைந்து இலட்சத்து ஐம்பது ஆயிரம் மைல் ஓடுகிறது.

இதில் ஏதாவது தாமதம் இருக்குமா? இல்லை தடம் மாறுகிறதா? அவ்வளவு நேர் நிர்வாகமாகச் சிறிதும் பிறழாமல் எந்தப் பெரிய ஆற்றல் (Consciousness) நிர்வாகம் நடத்துகிறது என்று பார்த்தால், அத்தகைய பெரிய நிர்வாக ஆற்றல் பிரபஞ்சத்தில் எல்லாம் வல்ல இறைவெளியின் அழுத்தம் என்ற உந்து ஆற்றலால் தான் நடக்கிறது. அதே போல் என் உள்ளத்திலே, உடலிலே நடக்கிறதும் அதே தான். உடலிலும் சரி, பிரபஞ்சத்திலும் சரி, அணுவிலும் சரி, அணுவைச் சுற்றிலும் சரி எங்கும் நிறைந்த ஆற்றலாக இருப்பது அந்த எல்லாம் வல்ல இறைவெளி ஒன்றுதான்.

எனவே, அந்த அழுத்தமும், அதன் அறிவும் ஒன்றிணைந்த ஆற்றல் தான் நாம் எந்தச் செயலைச் செய்தாலும் அந்தச் செயலுக்குத் தக்க விளைவுகளைத் தந்து கொண்டே இருக்கிறது. கையைத் தட்டினால் ஒலி வருகிறது. அதே போன்று அதிகமாகச் சாப்பிட்டால் உடனே அசீரணம். அவ்வாறு எந்தச் செயல் செய்தாலும் தவறாகச் செய்தால் அது தவறு என்று உணர்ந்த உடனே துன்பம் உண்டாகிறது. சரியாகச் செய்தால் நாம் வாழ்க்கையைச் சீராக வாழ்ந்து கொண்டு வருகிறோம் என்று பொருள். தவறு செய்யாது இருக்க வேண்டும். தவறு செய்தால் உடனே தண்டனை இருக்கிறது என்பதுதான் இறை ஆற்றல் உணர்த்தும் நீதி. அது கூர்தலறம் (Cause and effect system) இதைத் தெரிந்து கொள்ள இறையுணர்வு வேண்டும். தெரிந்து கொண்ட பிறகு மக்களோடு ஒற்றுமையாக வாழ்வதற்கு அறநெறி வேண்டும். அறநெறிதான் உண்மையில் இறை வழிபாடு.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

No Responses to "அறநெறியே இறைவழிபாடு"