வாழ்க வளமுடன்

இந்த வயதில்தான் எனக்கு ஒரு குரு கிடைத்தார். எனது வயதுக்கு ஏற்ப அவர் பக்தி மார்க்கத்திலேயே எனது நினைவை ஆழ்த்தி வைத்தார். சில சமயம் சுத்த அத்வைத தத்துவம் பேசினாலும், எனக்கு அது புரியவில்லை. அவருக்கு அப்போது வயது எழுபத்தைந்து. அவர் பெயர் ஏ. பாலகிருஷ்ணன். அவருடைய நற்போதனைகள் என் சிந்தையைத் தூண்டிவிட்டன. அவர் சொற்படி ஒழுக்கத்தோடும், அடக்கத்தோடும் நடந்து வந்தேன். பஜனை செய்வதில் மிகவும் ஆர்வம் பெற்றேன். எனினும் அவர் விளக்கும் கருத்துக்களின் அடிப்படை உண்மை அறிய, எப்போதும் சிந்தித்துக் கொண்டேயிருப்பேன். எனக்குப் பன்னிரெண்டு வயதிற்குள் எனது உள்ளம் சில குறிப்பிடத்தக்க வினாக்களை எப்போதும் எழுப்பிக்கொண்டேயிருக்கத் தொடங்கியது. அவை


1. இன்ப துன்பம் எனும் உணர்ச்சிகள் யாவை? இவற்றின் மூலமும் முடிவும் என்ன?

2. நான் யார்? உயிர் என்பது என்ன? உயிர் உடலில் எவ்வாறு இயங்குகின்றது? நோயும் முதுமையும் ஏன் உண்டாகின்றன? எப்படி உண்டாகின்றன?


3. கடவுள் யார்? பிரபஞ்சத்தை ஏன் அவர் படைத்தார்?


4. ஏழ்மை ஏன்? எப்படி உண்டாயிற்று? அதைப் போக்குவது எப்படி?


இவ்வினாக்கள் தான் என் சிந்தனையை ஆட்கொண்டன. அப்போது கிடைத்த குரு, எனக்குப் பஜனைப் பாடல்கள், சதகங்கள் இவற்றைத்தான் போதித்தார். ஆயினும் எனது வினாக்களில் ஒன்றுக்குக்கூட அவரால் விடை கூற முடியவில்லை. எனினும் எனக்கு இவ்வினாக்களை ஒட்டிய விளக்கங்கள் சில கிடைத்தன. அவை:

1. கடவுளை வழிபட்டு நமது குறைகளை நிறைவு செய்து கொள்ள வேண்டும். அதன் மூலம் கடவுளே காட்சியாகி, நமக்கு அவர் நிலையை விளக்குவார்.


2. நல்ல வருவாயுள்ள தொழிலாகத் தேர்ந்து எடுத்து அதைச் செய்ய வேண்டும். அதன் மூலம் வறுமை போகும். தறி நெசவின் மூலம் வறுமை மிகுமே அன்றி, அது போகாது.

3. ஒரு ஞானகுருவை அடையவேண்டும். அவர் மூலம் உயிரைப் பற்றிய விளக்கம், அறிவைப் பற்றிய விளக்கம் தெரிந்து கொள்ள வேண்டும். இவையே என் உள்ளொளி காட்டிய விளக்கம்.


இந்த முடிவின்படி செயல்புரியத் தொடங்கினேன். வயது பதினான்கு ஆகிவிட்டது.


-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

No Responses to "எனது முதல் ஆசான்"